×
 

"எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் தனது நாட்டின் ராணுவ பலத்தை பெருமையுடன் குறிப்பிட்டு பேசியதோடு ஈரான் போர் தனக்கு தனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை என்பதை கற்று கொடுத்துள்ளதாக பெருமிதம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் திறனுக்கு எல்லைகள் இல்லை என்ற நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.

மூன்று மாதங்களாக நீடித்த ஈரான்–அமெரிக்க மோதல் உலகளாவிய பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்கிய நிலையில், பதற்றத்தை தணிக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், அந்த ஒப்பந்தத்தின் நகல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து  அவரது சொந்த குடியரசுக் கட்சியினரிடமிருந்தே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஈரான் அணு ஆயுத செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் மற்றும் அதற்கான கையிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகள் தற்போதைய ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்பதே எதிர்ப்பாளர்களின் முக்கிய குற்றச்சாட்டாகும். ஆரம்பத்தில் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று வலியுறுத்திய டிரம்ப், பின்னர் சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பது அரசியல் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல் மீது அனுதாபப்படுவர் ட்ரம்ப் மட்டும்தான்! அவரையே பிரச்னையா பாக்காதீங்க! ஜே.டி.வான்ஸ் அதிருப்தி!

தனது அதிகாரத்தின் வரம்புகள் குறித்து போர் ஏதேனும் பாடம் கற்றுத்தந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “வரம்புகள் இருக்கின்றன என்பது தெரியும். ஆனால் எனது செயல்பாட்டு திறனுக்கு எல்லைகள் இல்லை என்றே நான் இன்னும் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், ஈரானின் இராணுவ திறனை அமெரிக்கா முறியடித்துவிட்டதாகக் கூறிய அவர், கடற்படை முற்றுகை மூலம் ஈரானின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியதாகவும் பெருமிதம் தெரிவித்தார். “எந்தக் கப்பலும் அந்த முற்றுகையை மீற முடியவில்லை. சில முயற்சிகள் நடந்தாலும் அவை வெற்றியடையவில்லை,” என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், இந்த ஒப்பந்தம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கை அல்ல என்றும், உலகளாவிய பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்க எண்ணெய் விநியோகத்தை சீராக வைத்திருப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் டிரம்ப் விளக்கம் அளித்தார். போரை மேலும் தீவிரப்படுத்தியிருந்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, உலக எண்ணெய் சந்தையில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த புதன்கிழமை டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம், அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து 60 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த வழிவகுத்துள்ளது.

இதற்கிடையில், ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட அமலாக்கம் குறித்து ஆலோசிக்க சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது பயணத்தை திடீரென ஒத்திவைத்திருப்பது புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை மேலும் அதிகரித்துள்ளது.

முன்னதாக பேசிய வேன்ஸ், “ஈரான் ஒப்பந்த நிபந்தனைகளை மதித்து நல்ல ஒத்துழைப்பை வழங்கினால் பொருளாதார சலுகைகள் அதிகரிக்கப்படும். அதில் பின்னடைவு ஏற்பட்டால் அந்த சலுகைகள் திரும்பப் பெறப்படும்” என்று எச்சரித்திருந்தார்.

மறுபுறம், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, இந்த ஒப்பந்தம் குறித்து எச்சரிக்கையான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்றாலும், அது அமெரிக்காவின் நிலைப்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக பொருள் கொள்ளக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், மத்திய கிழக்கில் பதற்றத்தை தற்காலிகமாக குறைத்துள்ள இந்த ஒப்பந்தம் நீண்டகால அமைதிக்கான அடித்தளமாக அமையுமா அல்லது புதிய அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.

இதையும் படிங்க: ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share