×
 

காங்கிரஸ் செய்த தவறுதான் விஜய் முதல்வரானது! சங்கரன்கோவிலில் டிடிவி தினகரன் பேட்டி!

காங்கிரஸ் செய்த தவறால்தான் விஜய் முதலமைச்சரானார் என்றும், தவெக ஆட்சி சினிமா மாயை என்றும் சங்கரன்கோவிலில் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

திமுக மீது கொண்ட தேவையற்ற கோபத்தினால் காங்கிரஸ் கட்சியினர் செய்த வரலாற்றுப் பிழையால்தான் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முடிந்தது என்றும், தவெகவின் சினிமா மாயை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றுவது புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம். 

அதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஆனால், டெல்டாவில் வழக்கமாக ஜூன் 12-ல் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறக்காமல் தாமதித்துவிட்டு, தற்போது காலம் கடந்து மேட்டூர் அணையைத் திறப்பதால் விவசாயத்திற்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இது கடுமையான பாதிப்பையே ஏற்படுத்தும் என விவசாயிகள் குமுறுகின்றனர். இந்த நீர் திறப்பு தற்குறிகள் ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே பயன்படும் என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: அனிதா கனவு நிறைவேறும்... நீட் தூக்கி எறியப்படும்..! அமைச்சர் ஆதவ் உறுதி..!

தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சருக்கு இன்னும் பழைய பழக்க தோஷம் போகவில்லை; ஏதோ சூட்டிங் நடப்பது போன்ற மனநிலையில்தான் ஆட்சி செய்கிறார். சினிமா என்பது வெறும் கற்பனை உலகம். அதை நம்பி இளைஞர்களும் பெண்களும் மாற்றம் தேடி ஏமாந்து வாக்களித்துவிட்டார்கள். தாய்மொழி தமிழைக்கூட தவெக அமைச்சர்களால் ஒழுங்காகப் பேச முடியவில்லை; நிதி அமைச்சரோ மதத்தின் பெயரால் குழப்பங்களை ஏற்படுத்துகிறார். முதல்வரிடமும் சரக்கு இல்லை; பார்த்துப் படிக்கவே திணறுகிறார். லாட்டரி விழுந்தது போல அமைச்சரானவர்கள் பேசும் பேச்சுகளால் மக்கள் நொந்துபோயுள்ளனர் என்று சரமாரியாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியினர் திமுக மீது கொண்ட கோபத்தால் தவெகவை ஆதரித்து மாபெரும் தவறைச் செய்துவிட்டனர். காங்கிரஸ் ஆதரவு தரவில்லை என்றால் தவெகவின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தங்கள் தலையிலேயே கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொரிந்து கொண்ட காங்கிரஸ் நிலைப்பாடுதான் விஜய் முதல்வராகக் காரணம். தமிழ்நாட்டைப் பிடித்துள்ள இந்த சாபக்கேட்டை வாக்களித்த மக்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டனர்; இந்த மாயை மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று டிடிவி தினகரன் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு வேண்டும்! முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share