புதிய எண்ணெய் கிணறுகள்.. கேள்விக்குறியாகும் மீனவர்கள் வாழ்க்கை.. TTV தினகரன் வார்னிங்..!!
கடற் பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் முயற்சிக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடல்வளத்தையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஐந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன், கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் இயற்கை வளம் நிறைந்த கடல் பகுதிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எண்ணெய் கிணறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கே இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது கூடுதலாக எண்ணெய் கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மீனவ மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் செயல்படுத்த முடியாத எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டங்களை அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்த முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: பெரியார் கொள்கைத் தலைவரா.? தவெக நாடகம் அம்பலம்..! வெளுத்துவிட்ட TTV தினகரன்..!!
கடல் வளத்தையும், மீன்வளத்தையும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் எண்ணெய் கிணறுகளை அமைக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை உள்ளிட்ட எவ்வித அனுமதிகளையும் மாநில அரசு வழங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் நலன் தொடர்பான இந்த முக்கியமான பிரச்சினையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தனியார் நிறுவனத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதே அவரது உறுதியான நிலைப்பாடாகும்.
இதையும் படிங்க: தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?