நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!
விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துரைத்துள்ள டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு பல்வேறு வலியுறுத்தல்களை முன் வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். லஞ்சம் கேட்போரிடம் இது முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சி என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் கூறினார்.
நெல் கொள்முதல் செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை! ஒரு லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி சரிவு! அதிர்ச்சியில் வேளாண்துறை!
"லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல., மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக விவசாயிகள் கூறுவதாக குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், இதுதான் வெளிப்படையான ஆட்சி என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இதை செய்யாவிட்டால் சென்னைக்கு வந்து... சி.எம்.விஜய்க்கு 4 கிராம விவசாயிகள் பகிரங்க எச்சரிக்கை...!