விறுவிறு இடைத் தேர்தல்... வெற்றிக் கனி யாருக்கு.? இன்று வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்..!!
தவெக சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புகளுடன் களத்தில் இறங்கத் தொடங்கியுள்ளன. இந்த இரு தொகுதிகளும் தனி இட ஒதுக்கீட்டு தொகுதிகளாகும். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், பி. சத்யபாமா தாராபுரத்திலும் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் பதவி துறந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இந்த இடங்கள் காலியாயின. இதையடுத்து தேர்தல் ஆணையம் இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது. வாக்குப்பதிவு அக்டோபர் 6 அன்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9 முதல் தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறும்.இந்த நிலையில் திமுக முதல் கட்சியாகத் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞரும் திமுக சட்டத்துறை இணைச் செயலருமான ஐ. பரந்தாமன் களமிறங்குகிறார்.
தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிடுவர் என்று திமுக தெரிவித்துள்ளது. பரந்தாமன் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவர் கட்சிக்குள் முக்கியப் பேச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுகன்யா இளைஞரும் உள்ளூர் அமைப்பாளரும் ஆவார். இந்த அறிவிப்பு திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி இந்த இரு தொகுதிகளிலும் கடுமையான போட்டியை எதிர்பார்த்து முழு பலத்துடன் களத்தில் இறங்கப் போவதாகத் தெரிகிறது.அதே நேரத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் தனது வேட்பாளர் பட்டியலை இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!
கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று பின்னர் தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமாவை மீண்டும் களமிறக்கும் வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு இது முதல் இடைத்தேர்தல் சவாலாக அமைந்துள்ளது. ஆட்சி அமைத்து சில மாதங்களிலேயே நடைபெறும் இந்தத் தேர்தல், மக்கள் மத்தியில் அரசின் செயல்பாடுகளுக்கு கிடைக்கும் ஆதரவை அளவிடும் சோதனையாகப் பார்க்கப்படுகிறது. தவெக தொண்டர்கள் மத்தியில் இரண்டு தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்வதில் உறுதியான நம்பிக்கை நிலவுகிறது.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!