ஹாட்ஸ்பாட் ஆன பட்டினப்பாக்கம்..! புதிய தலைமைச் செயலகம்... நாளை கலந்தாய்வு கூட்டம்.!
புதிய தலைமைச் செயலகம் குறித்து நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகக் கூறி, அரசு இதற்கு மாற்றாக பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
சுமார் 25 முதல் 26 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகள் கொண்ட இந்த வளாகம் உருவாக்கப்படவுள்ளது. இதில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவக் குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள ஒன்பது மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் அவர்களிடையே நிலவுகிறது.
கடலை ஒட்டி வாழும் இம்மக்களுக்குப் படகுகள் நிறுத்துதல், வலைகள் உலர்த்துதல், மீன் விற்பனை போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு கடற்கரைப் பகுதி இன்றியமையாததாக உள்ளது. புதிய நிர்வாக வளாகம் அமைந்தால் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும், போக்குவரத்து நெரிசல் உருவாகும், மீன் சந்தை மற்றும் சிறிய வணிகங்கள் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், இந்த நிலம் வரலாற்றுரீதியாக மீனவ சமூகத்திற்குச் சொந்தமானது என்றும், அதனை வீட்டுவசதிக்காக ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தப் பின்னணியில், ஒன்பது கிராமங்களின் பிரதிநிதிகள் சார்பில் நாளை மாலை 4 மணிக்கு சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெறவும், புதிய தலைமைச் செயலகத்தை மாற்று இடத்தில் அமைக்கவும் அரசை வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இதையும் படிங்க: ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!
மேலும், அடுத்த கட்டமாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் நேரடிப் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பதும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினர், பட்டினப்பாக்கம் ஏற்கனவே நெருக்கடியான பகுதியாக இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். அருகிலுள்ள சாந்தோம் சாலை மற்றும் லூப் ரோடு போன்றவற்றில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பள்ளிகள், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அடர்த்தியாக வாழும் இப்பகுதியில் பெரிய நிர்வாக வளாகம் அமைவது சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரைச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். மாற்று இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.அரசு தரப்பில், தற்போதைய தலைமைச் செயலகத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையைப் போக்கவும், நிர்வாகத்தை ஒருங்கிணைக்கவும் இந்தத் திட்டம் அவசியம் எனக் கூறப்படுகிறது. எனினும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் பொதுக் கருத்துக்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாளை நடைபெறவுள்ள கலந்தாய்வுக் கூட்டம் இந்தப் பிரச்சினையில் முக்கியமான திருப்புமுனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!