தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராகத் தவெக சென்னை வடக்கு வட மாவட்டச் செயலாளர் V. சிவா நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) புதிய தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. வி. சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 21, 2026) வெளியிட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வி. சிவா அவர்களிடம் அதற்கான நியமன அரசாணையை (G.O.) நேரில் வழங்கித் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஆர். கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக இருந்த திரு. பூச்சி எஸ். முருகன் அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய தலைவராகத் திரு. வி. சிவா ஜூலை 21, 2026 முதல் உடனடியாகப் பொறுப்பேற்கும் வகையில் நியமிக்கப்படுகிறார். இவரது பதவிக்காலச் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்துத் தனியாக அறிவிப்புகள் வெளியாகும்.
இதையும் படிங்க: கைக்குழந்தையோடு வீதியில் நிற்கிறோம்! வாக்குறுதியை நிறைவேற்ற தவெக அரசுக்கு செவிலியர்கள் கோரிக்கை!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி. சிவா, தவெக கட்சியில் வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்கும் தொகுதி மக்களுக்கும் ஆற்றிய தீவிரப் பணிகளுக்குப் பரிசாக இந்த உயரிய அரசுப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முதியவரை தாக்கிய தவெக நிர்வாகி..! காட்டுமிராண்டித் தனம்... விளாசிய வானதி சீனிவாசன்..!!