கச்சத்தீவு மீட்பு குறித்த கேள்வி..!! மாறி மாறி "NO COMMENTS"-னு சொன்ன அமைச்சர்கள்..!!
கச்சத்தீவு குறித்த கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் ஐடி துறை அமைச்சர் குமார் ஆகிய இருவரும் மாறி மாறி நோ கமெண்ட்ஸ் எனக் கூறி பேட்டியை முடித்தனர்.
திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசிக்கும் மீனவ சமூக மக்களின் நீண்டகால அடிப்படைத் தேவைகளை நேரில் புரிந்துகொள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர் இன்று நேரில் பயணம் மேற்கொண்டனர். மீனவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு செய்த இரு அமைச்சர்களும், அங்குள்ள மக்களிடம் நேரடியாக உரையாடி அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காலதாமதமின்றி நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதுகுறித்து அமைச்சர் குமார் பேசுகையில், “எனது சொந்தக் கோரிக்கையின் பேரில்தான் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இங்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் உத்தரவுப்படி இப்பகுதி மீனவ மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்” என்றார்.
அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டோம். குறிப்பாக, பட்டா வழங்கல், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து முக்கிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இவற்றை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளோம். அதிகாரிகளுக்கு ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம்!! பலவீனமான தலைமை என அதிமுகவை விமர்சிக்கும் தவெக!!
கடலோர ஒழுங்குமுறை விதிகள் (CRZ) காரணமாக இத்தகைய பகுதிகளில் திட்டங்கள் செயல்படுத்த சிரமம் உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்கள், “மீனவ சமூகத்தினருக்கு சில சிறப்புச் சலுகைகளும் விதிவிலக்குகளும் உள்ளன. இதன் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்” என்றனர். எனினும், கச்சத்தீவு மீட்பு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஸ்ரீநாத்துக்குப் பதிலாக அமைச்சர் குமார் பலமுறை “No comments” என்று கூறி தவிர்த்தார். அதேபோல், “இந்தத் தொகுதியில் பட்டா தொடர்பான பிரச்சனைகள் பெருமளவில் உள்ளனவே?” என்ற கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த அமைச்சர் குமார், “No comments” எனக் கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.
திருவான்மியூர் குப்பம் உள்ளிட்ட சென்னை கடற்கரைப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் நீண்டகாலமாக பட்டா, குடியிருப்பு உறுதி, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நேரடி ஆய்வு மீனவ சமூகத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை வாக்குறுதிகளின் நடைமுறைப்படுத்தலை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இனி தேவையில்லை!! தனிப்பெரும்பான்மை நோக்கி நகர்கிறது விஜயின் தவெக!