முல்லை பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ்..! தவெக MLA மீது கேரள வனத்துறை வழக்குப்பதிவு.!
முல்லைப் பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ் எடுத்த தவெக MLA மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிகழ்வின் போது ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது இரு மாநிலங்களுக்கிடையேயான பதற்றத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரனுடன் தொடர்புடைய குழுவினர், அனையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டு நீர் வெளியேறும் காட்சிகளை ட்ரோன் மூலம் பதிவு செய்தனர்.
இந்த காட்சிகள் பின்னர் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வடிவில் பகிரப்பட்டன.இந்த சம்பவம் கேரள மாநிலத்தின் பெரியாறு புலிகள் காப்பக எல்லைக்குள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மிக உயர்ந்த பாதுகாப்பு மண்டலமாக கருதப்படுகிறது. வனத்துறை அல்லது போலீசாரின் முன் அனுமதி இல்லாமல் ட்ரோன் பறக்கவிட்டு வனப்பகுதி மற்றும் கால்வாய் காட்சிகளை பதிவு செய்ததாக கேரள வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நீர் திறப்பு நிகழ்விற்கு வந்திருந்த தமிழகக் குழுவினரில் சிலர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் அந்த காட்சிகள் சட்டமன்ற உறுப்பினரின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கேரள வனத்துறை இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்தது மற்றும் ட்ரோன் மூலம் காட்சிகளை பதிவு செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ உள்ளிட்ட தொடர்புடையோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தன்னைக் கேலி செய்வதா.? அதென்ன கிண்டல்.? பேரவையில் அமைச்சர் மரியவில்சன் ஆவேசம்.!!
பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் விலங்குகளின் இயல்பான வாழ்விடத்தையும், காப்பகத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பாதிக்கும் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீண்டகாலமாக தமிழ்நாடு-கேரளா இடையேயான விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!