×
 

மேலூரில் மட்டும்தான் மோசடியா.? தமிழகம் முழுவதும் டார்கெட்.? சந்தேகத்தைக் கிளப்பிய வேல்முருகன்.!!

தமிழக முழுவதும் ஆன்லைன் மோசடி வளைய அமைப்பு உள்ளதா என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

மேலூரில் மட்டும்தான் ஆன்லைன் மோசடியா? தமிழகம் முழுவதும் ஆன்லைன் மோசடி வலையமைப்பு உள்ளதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘FQL’ என்ற ஆன்லைன் செயலி மூலம் அதிக இலாபம், இரட்டிப்பு இலாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகள் பெறப்பட்டு, தற்போது பெரும் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உழைப்பால் ஈட்டிய பணத்தை இழந்திருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த மோசடியின் உண்மையான அளவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை முழுமையான விசாரணையின் மூலம் அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டப்படி கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் கோரியுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் மட்டுமே தொடர்புடையதா? அல்லது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் வெவ்வேறு செயலிகள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களில் இதேபோன்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றனவா? என்பதையும் அரசு விரிவாக விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழ்நாடு முழுவதும் பதிவாகியுள்ள இணையவழி மற்றும் முதலீட்டு மோசடி புகார்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, ஒரே மாதிரியான செயல்முறைகள், வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் முகவர் வலையமைப்புகள் ஏதேனும் தொடர்புடையவையா என்பதை புலனாய்வு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் வங்கிக் கணக்குகள், சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கண்டறியப்படும் சொத்துகள் மற்றும் பணப் பரிமாற்றங்களை சட்டப்படி உடனடியாக முடக்கி, மோசடியில் பறிபோன பொதுமக்களின் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அதேபோல், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரிடமிருந்தும் முறையாக புகார் பெற்று, அவர்களின் பண இழப்பு குறித்த முழுமையான ஆவணங்களைச் சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சட்ட உதவியும் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். எளிய மக்களின் பல ஆண்டுகால உழைப்பையும் சேமிப்பையும் ஆசை வார்த்தைகளைக் கூறிச் சுரண்டும் இத்தகைய இணையவழி மற்றும் முதலீட்டு மோசடிகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.

 

இதையும் படிங்க: மத அரசியல்..! சீரழியும் சட்டமன்ற மாண்பு..! வெளுத்துவிட்ட நயினார்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share