காஞ்சியில் மக்கள் சந்திப்பு… முன்னெச்சரிக்கை… முன்கூட்டியே வந்த விஜய்..!
காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு முன்கூட்டியே விஜய் வருகை தந்தார்.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. விஜய் விரைவில் கரூருக்கு செல்வார் என்று கூறப்பட்டது. அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு கடிதமும் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் முடங்கியது. பிறகு கட்சிப் பணிகளை மெல்ல தொடங்கினார் விஜய். இந்த நிலையில் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் இருந்து தனது மக்கள் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்க இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: "ஒரு கவுன்சிலர் கூட இல்ல... பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்க நினைப்பா?" - ஆதவை பொளந்தெடுத்த நயினார் நாகேந்திரன்...!
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக தனது நீலாங்கரை வீட்டிலிருந்து விஜய் புறப்பட்டார். கரூர் சம்பவத்துக்கு விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு விஜய் முன்கூட்டியே வருகை தந்தார். 11 மணி அளவில் மக்கள் சந்திப்பு நடைபெறும் நிலையில் 10:30 மணிக்கு விஜய் காஞ்சிபுரத்திற்கு சென்றடைந்தார். அது மட்டுமல்லாது கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவரை தமிழக வெற்றி கழகத்தினர் திருப்பி அனுப்பி வைத்தனர். கரூர் சமூகத்தில் கைக் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை தமிழக வெற்றி கழகத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்!! குற்றவாளிகளை நெருங்கும் சிபிஐ!! தவெக தலைமை அலுவலக ஊழியரிடம் விசாரணை!