சொன்னா கேளுங்கம்மா..! தஞ்சையில் தவெக நிகழ்ச்சி...!! கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீஸ்..!!
தஞ்சையில் நடைபெற உள்ள விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை போலீசார் திருப்பி அனுப்பினர்.
தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த முக்கிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீடிக்கும் இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு கியூஆர் கோடு கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் மட்டுமே கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. பொது மக்கள் அல்லது அங்கீகரிக்கப்படாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கட்சி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நேரில் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்து உரையாற்ற உள்ளார். இது வெறும் நிர்வாகிகள் சந்திப்பு என்ற அளவில் மட்டுமின்றி, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் முக்கிய அரசியல் நிகழ்வாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக சோழ தேசமாக அழைக்கப்படும் தஞ்சாவூர் பகுதியில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் அடித்தள மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி விஜய் பேச வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. முந்தைய கூட்டங்களைப் போலவே, கட்சியின் கொள்கைகள், தேர்தல் உத்திகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி போய் அமித் ஷா காலை...எடப்பாடி பழனிசாமியை விளாசியத் தள்ளிய நாஞ்சில் சம்பத்...!
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயின் நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளுடன் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்று ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு அனுமதி மறுத்த போலீசார் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெளிவாக விளக்கம் கொடுத்தனர்.
இதையும் படிங்க: விஜயின் அடுத்தகட்ட நகர்வு... நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி..! முக்கிய தகவல்..!!