நம்மள பாத்தாலே நடுங்குறாங்க... நம்ம ஆட்டம் தான் இனி! விஜய் அறைகூவல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்தாலே ஆளும் அரசு அஞ்சி நடுங்குவதாக விஜய் விமர்சித்தார்.
விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று நாகை, திருவாரூரில் விஜய் பிரச்சாரம் நடத்தினார். இந்த நிலையில், தொண்டர்களின் பாசத்திற்கு நிகரில்லை என மனம் நெகிழ்ந்து விஜய் கூறியுள்ளார்.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது., உங்க விஜய் நான் வரேன் என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் தொடங்கினோம் என்றும் இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்ததாகவும் தெரிவித்தார் .
நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர் என்றார். ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காய்த்த மரம்தான் கல்லடிப்படும்! கணைகள் பொய்த்துவிடும்.. சேகர்பாபு உறுதி..!
இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றும் நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன் எனவும் கூறினார்.
மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை என்றும் இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும் என்றும் இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதே திமுக VS தவெக- வா? அய்யாசாமி பரீட்சை எழுத்திட்டு வாங்க பேசலாம்… விளாசிய அதிமுக மாஜி அமைச்சர்…!