×
 

#TNElectionResults2026: தெறிக்கவிடும் விஜய்..!! ஆட்சி அமைப்பது தொடர்பாக தவெக மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய மீட்டிங்..!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் வரிசையாக கணக்கிடப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 65 தொகுதிகளிலும், திமுக 61 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வருகின்றனர். குறிப்பாக, தவெக முன்னிலை வகிக்கும் பெரும்பாலான தொகுதிகளில் 10,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கை இன்னும் பல மணி நேரங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மை (அதாவது 118 இடங்கள்) கிடைக்காவிட்டால் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் குறித்து தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனையில், அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர் ஜான் ஆரோக்யசாமியும் பங்கேற்றார். தேர்தல் முடிவுகளின் சிக்கலான தன்மையை கருத்தில் கொண்டு, கூட்டணி வாய்ப்புகள், ஆதரவு தேடல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் தங்கியுள்ள இல்லத்திற்கு தெற்கு மண்டல இணை ஆணையர் சிபாஸ் கல்யாண் தலைமையில் துணை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர் பரத், போக்குவரத்து இணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் வருகை தந்தனர். இவர்கள் தேர்தல் நடைமுறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பான விவகாரங்களைப் பற்றி விவாதித்ததாகத் தெரிகிறது. மேலும், பனையூர் பகுதியில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய்குமார் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் வாய்ப்பை தவெக பெறுமா அல்லது பாரம்பரியக் கட்சிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது வாக்கு எண்ணிக்கை முடிவுகளைப் பொறுத்தே தெரியவரும். தேர்தல் ஆணையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ முடிவுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் உத்திகளை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share