விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??
முதல்வரின் தனிப்பட்ட அறை, செயலகம் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் அனைத்தும் புதிய இடத்துக்கு இடம்பெயரும்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது அலுவலகத்தை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. தற்போது தலைமைச் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இயங்கி வரும் முதல்வரின் தனிப்பட்ட அறை, செயலகம் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் அனைத்தும் புதிய இடத்துக்கு இடம்பெயரும்.
முதல்வர் விஜய் தற்போது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பணியாற்றி வருவது வாஸ்து நெறிகளுக்கு ஏற்றதல்ல என அவரது ஜோதிட ஆலோசகர் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், சிறந்த சூழலை உருவாக்கும் வகையில் புதிய இடத்தைத் தேடிய நிலையில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் உச்ச மாடியில் உள்ள பிரம்மாண்டமான மாநாட்டு அரங்கம் முதல்வரின் கவனத்தை ஈர்த்தது. இந்த அரங்கம் ஏற்கெனவே அனைத்துக் கட்சி கூட்டங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு, உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைகள் உள்ளிட்ட முக்கிய அரசு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இங்கு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின்போது, 10-வது மாடியிலிருந்து தெரியும் வங்காள விரிகுடாவின் அழகிய நீலக்கடல் காட்சி முதல்வரை மிகவும் கவர்ந்தது. பரந்து விரிந்த கடல் தோற்றம் மனதுக்கு அமைதியையும், புதிய உற்சாகத்தையும் தருவதாக அவர் உணர்ந்தார். இதுகுறித்து ஜோதிடருடன் விரிவாக ஆலோசித்தபோது, அவர் முழு ஒப்புதல் அளித்தார். ``உயரத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தும் போது அனைத்து செயல்பாடுகளும் சுபமாகவும், வெற்றிகரமாகவும் அமையும். இன்னும் பல உயரங்களைத் தொடுவீர்கள்'' என்று ஜோதிடர் உற்சாகப்படுத்தியதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: உங்க சோகத்தை தான் நாங்க பாத்தோமே..!! தளபதி கச்சேரி டான்ஸ் போட்டு கிழித்த திமுக..!!
இதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. முதல்வரின் தனி அறை, முதலமைச்சர் செயலகம், நான்கு செயலாளர்களின் அலுவலகங்கள், ஆலோசகர்களுக்கான தனி அறைகள் மற்றும் ஒரு மினி கான்பரன்ஸ் ஹால் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழு நிர்வாக அமைப்பும் 10-வது மாடியில் இருந்து செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் முதல்வரின் தினசரி பணிகளை மேலும் சீராக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் ஆட்சியின் செயல்திறனை அதிகரிக்கும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. தலைமைச் செயலக வளாகத்துக்குள் இடமாற்றம் என்பதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முதல்வர் விஜய்யின் தலைமையில் அரசு நிர்வாகம் புதிய உயரங்களை எட்டும் என்பதற்கான சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "அரசு நெய்யில் SWEET செய்யக்கூடாது"..! கரூர் அரசு வேலை சர்ச்சை... கிருஷ்ணசாமி கண்டனம்..!