எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!
திமுகவின் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி என முதல்வர் விஜய்க்கு, உதயநிதி பதிலளித்துள்ளார்.
சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வெளியிட்ட அறிக்கைக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடியை அளித்துள்ளார். முதலமைச்சரின் புள்ளிவிவர வாதங்களுக்குப் பதிலளித்துள்ள அவர், தற்போதைய ஆட்சி அமைந்த விதம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் அறிக்கையில் திமுக 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி எனக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின் பின்வரும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும், அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பதவி வெறியோடு தாங்கள் ஆளுநர் மாளிகைக்கு 'டெய்லி அட்டெண்டன்ஸ்' போடவில்லை எனத் தவெக அரசைச் சாடியுள்ளார். நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதலமைச்சராகவே ஆகியிருக்கிறீர்கள், அதை மறந்துவிட்டீர்களா CM Sir? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!
முதல்வர் விஜய் தனது அறிக்கையில் 2006-ஆம் ஆண்டு அமைந்த திமுக அரசை விமர்சித்திருந்ததற்கு உதயநிதி அளித்த விளக்கம். 2006-இல் அமைந்த திமுக ஆட்சி, எதிர்த்தரப்பு எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்திலோ அல்லது கட்சிகளைப் பிளவுபடுத்தியோ அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல. அது முழுக்க முழுக்க திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்பதை முதல்வருக்குச் சொல்ல மறந்துவிட்டார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்க்கட்சியாக எங்களது வெற்றி என உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது பதிலளிக்காமல், வீட்டிற்குச் சென்று அறிக்கை வெளியிடுவது முறையல்ல என்றும் அவர் முதலமைச்சர் விஜய்யைக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த இரு பெரும் தலைவர்களுக்கிடையேயான அறிக்கை போர் தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு!