நாளை 10 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. பயன்படுத்திக்கோங்க மக்களே..!!
சென்னையில் நாளை 10 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15ம் தேதி கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடுவீடாக கொண்டு சேர்க்கும் முன்னோடி திட்டமாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, கிராமப்புறங்களில் 46 சேவைகளையும், நகர்ப்புறங்களில் 43 சேவைகளையும் வழங்குகிறது. பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, சிறு-குறு வணிக கடன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மக்கள் தங்கள் வீட்டருகே பெற முடியும்.
முதல் கட்டமாக, 10,000 முகாம்கள் மூலம் மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒரு லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு முகாம்களின் விவரங்களை விளக்கி, தேவையான ஆவணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 45 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ விடுதியில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை.? திருவல்லிக்கேணி போலீசார் ஆக்ஷன்..!
இத்திட்டம், டிஜிட்டல் அறிவு அல்லது இணைய வசதி இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மூன்று கட்டங்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த நான்காம் கட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (20.08.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-19க்குட்பட்ட எம்.எம்.டி.ஏ. மாத்தூர், 2வது பிரதான சாலையில் உள்ள ராயல் பேலஸ், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-26க்குட்பட்ட மாதவரம் பால் காலனியில் உள்ள தனுவாஸ் மினி ஹால், இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-57க்குட்பட்ட ஆதியப்பா தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி, திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-70க்குட்பட்ட பெரம்பூர், பந்தர் கார்டன் பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-87க்குட்பட்ட பாடி, கம்பர் தெருவில் உள்ள அன்னை மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-115க்குட்பட்ட இராயப்பேட்டை, ஜானி ஜஹான் கான் சாலையில் உள்ள பிரசன்டேசன் ஆலய சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-131க்குட்பட்ட அசோக் நகர், ருக்மணி தெருவில் உள்ள ஜி.ஆர்.டி. வாகன நிறுத்துமிடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-149க்குட்பட்ட ராமகிருஷ்ணா நகர், தாக்கூர் தெருவில் உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-187க்குட்பட்ட பாலய்யா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-193க்குட்பட்ட துரைப்பாக்கம், சி.எல். மேத்தா கல்லூரி ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 13 நாட்கள் போராட்டம்.. கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் விடுவிப்பு..!!