நெசவாளர்களுக்கு நியாயமான கூலி பெற்று தரப்படும்! ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் மேக்வால் உறுதி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று கைத்தறி நெசவாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
தென் தமிழகத்தின் பாரம்பரியத் தொழில்களான கைத்தறி நெசவு மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய சட்ட மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கிய வாக்குறுதிகளை அளித்தார்.
ராஜபாளையத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்ற அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நெசவுப் பணிகளைப் பார்வையிட்டார். நெசவாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து அவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க: அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக முழக்கம்! ஈரானுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்ட அரசியல் கட்சிகள்!
நெசவாளர்கள் தங்களது கடின உழைப்பிற்கேற்ற நியாயமானக் கூலியைப் பெறாமல், மிகக் குறைந்த அளவே கூலி பெற்று வருவது கவலையளிக்கிறது. இதனைச் சரி செய்ய மாநில கைத்தறித் துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசி, அவர்களுக்கு அதிகபட்சக் கூலி பெற்றுத் தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என அமைச்சர் உறுதியளித்தார்.
கைத்தறித் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் முறையிட்டனர். இது குறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளுடன் பேசித் தீர்வு காணப் போவதாக அவர் தெரிவித்தார். மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட முத்ரா கடன்கள் (Mudra Loans) நெசவாளர்களுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் தொழில்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம். அதன் அடிப்படையிலேயே மீனவர்களையும், தற்போது நெசவாளர்களையும் சந்தித்து வருகிறேன். இது முழுக்க முழுக்க அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான ஆய்வே தவிர, இதில் எந்த அரசியலும் இல்லை என விளக்கம் அளித்தார்.
முன்னதாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆய்வின் போது விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!