×
 

மக்களே தப்பித் தவறிக்கூட அந்த பக்கம் போகாதீங்க... வைகை அணையில் மறைந்திருக்கும் பேராபத்து...!

வைகை அணையில் திதி சடங்குகள்  செய்யக்கூடாது என்ற எச்சரிக்கையை மீறி நீர்தேக்கத்தில் இறங்கிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, தென் தமிழகத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அணையில், தற்போது நீர்மட்டம் சுமார் 32 அடியாக உள்ளது. அணையில் போதிய அளவு நீர் இருப்பதுடன், பலத்த காற்று வீசுவதால் நீர்தேக்கப் பகுதியில் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அணையின் நீர்தேக்கத்திற்குள் இறங்கக் கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஆழம் தெரியாத பகுதிகள், வண்டல் மண் படிவுகள் மற்றும் திடீர் பள்ளங்கள் இருப்பதால் நீருக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த எச்சரிக்கையை மீறி 50-க்கும் மேற்பட்டோர் வைகை அணை நீர்தேக்கப் பகுதிக்குள் இறங்கி, தங்களது முன்னோர்களுக்கான திதி மற்றும் தர்ப்பண சடங்குகளை மேற்கொண்டனர். சடங்குகள் முடிந்த பின்னர், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் நீரில் இறங்கி குளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பொதுமக்கள் நீரில் இறங்கியதால் அப்பகுதியில் இருந்தவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இன்னும் 2 மாதங்களில்... வைகை அணையை பார்வையிட்ட கையோடு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

அணையின் நீர்தேக்கத்தில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண் காரணமாக, பல இடங்களில் புதைகுழி போன்ற ஆபத்தான பள்ளங்கள் உருவாகியிருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மேலும், பலத்த காற்று வீசும் நேரங்களில் திடீரென அலைகள் அதிகரிப்பதும், காலடி தவறினால் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் செல்லப்படும் அபாயமும் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.

இதுபோன்ற சூழலில், திதி உள்ளிட்ட மதச் சடங்குகளுக்காக அணை நீர்தேக்கத்தில் மக்கள் இறங்குவதைத் தடுக்க நிரந்தர தடுப்புகள் அமைப்பதுடன், அபாய எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு வேலிகள் மற்றும் கண்காணிப்பு பணியாளர்களை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். விடுமுறை நாட்கள் மற்றும் அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய பட்சம் போன்ற முன்னோர் வழிபாட்டு நாட்களில் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகளின் எச்சரிக்கையை பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் கடைபிடிப்பதும், பாதுகாப்பு விதிகளை மீறி அணை நீர்தேக்கத்தில் இறங்குவதைத் தவிர்ப்பதும் உயிரிழப்புகளைத் தடுக்க மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: மாநில உரிமைகளை தாரை வார்த்த தவெக அரசு! ஆளுநர் அர்லேகர் மதுரை ஆய்வுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share