நிர்வாகத்தின் நஞ்சு... விழிக்குமா அரசு? விளாசிய வளர்மதி..!!
கோவையில் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் உடல் நல பாதிப்புக்கு ஆளானதை சுட்டிக்காட்டி வளர்மதி விமர்சனம் செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்ட பின்னர் சுமார் 43 முதல் 44 வரை மாணவ-மாணவிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பள்ளியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, குறிப்பாக 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தோன்றின. சிலர் திடீரென சுருண்டு விழுந்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
இதனிடையே, கோவையின் அரசுப் பள்ளியொன்றில், பசியோடு அமர்ந்திருந்த மழலைகளின் தட்டில் விழுந்த உணவு, மருந்தாவதற்குப் பதில் மயக்க மருந்தாகிப் போனது பெரும் சோகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். மதிய வெயிலின் தகிப்பை விட, அந்த உணவைச் சாப்பிட்ட பிஞ்சுகள் வரிசையாக வாந்தி எடுத்து, மயங்கிச் சரிந்த காட்சி அங்கே திரண்டிருந்தோரின் நெஞ்சைப் பிழிந்தது என்றும் பிஞ்சுகள் தட்டில் பல்லி விழுந்தது நிர்வாகச் சீர்கேட்டின் அலட்சியம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: செம்ம ட்விஸ்ட்... அதிமுகவில் இணைந்த காளியம்மாள்... அரசியல் வட்டாரத்தில் ஷாக்..!!
மூன்று பேர் நீக்கம் ஒரு நாடகம் உங்கள் கையாலாகாத்தனத்தை மூடும் வேடம் என்று திமுகவை விமர்சித்தார். நடவடிக்கை என்பது 'சடங்கு' அல்ல என்றும் இனி நடக்கக் கூடாததே உண்மையான தீர்வு என்றும் பசிக்குச் சோறிடும் இடத்தில் நஞ்சா எனவும் கேள்வி எழுப்பினார். இது அரசுக்கே அடுக்காத பெரும் அவமானம் என்று விமர்சித்துள்ளார். தமிழகத்தின் எந்தப் பள்ளி வாசலும் இனி மருத்துவமனைக்கு வழி காட்டக் கூடாது என்றும் உயிரோடு விளையாடும் இந்த அவலம் இனியொரு முறை எங்கும் நிகழக் கூடாது என்றும் கூறினார். நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வாகும் என்றும் அந்த தீர்வு வெகு விரைவில் மக்களால் உங்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!