×
 

காதலர் தின ஸ்பெஷல்..!! ஓசூர் ரோஜா பூக்களுக்கு கூடுது மவுசு..!! குவியும் ஆர்டர்கள்..!!

காதலர் தினத்தை முன்னிட்டு உள்நாட்டு வர்த்தகத்தில் ஓசூர் ரோஜாக்களுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதி, தமிழ்நாட்டின் முக்கிய ரோஜா சாகுபடி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில்களில் (கிரீன்ஹவுஸ்) உயர்தர ரோஜா மலர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. தாஜ்மஹால் (அடர் சிவப்பு), நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட வகை ரோஜாக்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. இவை தரம் மற்றும் நீடித்த தன்மைக்கு பெயர் பெற்றவை.

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் போன்ற சிறப்பு நாட்களை முன்னிட்டு, ஓசூர் ரோஜாக்கள் ஐரோப்பா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கடுமையான போட்டி, அதிகரித்த விமான போக்குவரத்து கட்டணம் ஆகியவை ஏற்றுமதியை பாதித்தன. இதனால், பல விவசாயிகள் ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டு சந்தையை நோக்கி திரும்பினர்.

இதையும் படிங்க: 1 கோடி மாணவர்களின் ஆதார் விவரம் புதுப்பிப்பு! UIDAI சாதனை! மோசடிகளை தடுக்க அதிரடி நவடிக்கை!

இந்த ஆண்டு காதலர் தினத்தை (பிப்ரவரி 14) முன்னிட்டு உள்நாட்டு வர்த்தகத்தில் ஓசூர் ரோஜாக்களுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள நகரங்களில் ஆன்லைன் தளங்கள் வாயிலாக ஆர்டர்கள் பெருகியுள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வழக்கமான நாட்களில் தினசரி சுமார் 2 லட்சம் ரோஜா மலர்கள் உள்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது தினசரி 10 லட்சம் மலர்கள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

ரோஜா உற்பத்தியாளரும் விவசாயியுமான சதீஷ் கூறுகையில், “கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் பெரிய அளவில் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், சாகுபடி பரப்பு சற்று குறைந்திருப்பதால் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது” என்றார்.

விலை உயர்வும் குறிப்பிடத்தக்கது. சாதாரண நாட்களில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரூ.150-க்கு விற்கப்பட்டது. ஆனால், காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. இது கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, தாஜ்மஹால் வகை ரோஜாவுக்கு 80 சதவீத ஆர்டர்கள் வந்துள்ளன. வெளிநாட்டு ஏற்றுமதி சரிந்த நிலையில், உள்நாட்டு சந்தையில் ஏற்பட்ட இந்த வரவேற்பும் விலை உயர்வும் விவசாயிகளுக்கு புது நம்பிக்கையை அளித்துள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தால் ஓசூர் பகுதி ரோஜா விவசாயிகளின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி..! டாடா நிறுவனத்தை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share