விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு... திருமாவளவன் ரேம்ப் வாக்... களைக்கட்டிய அரங்கம்..!
விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் திருமாவளவன் ரேம்ப் வாக் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாடு, கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழ்த் தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்தவும், மாநில சுயாட்சி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தவும் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான தமிழ்த் தேசியம் இங்கு முக்கிய இடம் பெறுகிறது. சாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றுடன் தமிழ்த் தேசியத்தை இணைத்துக் கட்சி நீண்டகாலமாக முன்னெடுத்து வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இம்மாநாடு பார்க்கப்படுகிறது. மாநாட்டுத் திடல் உளுந்தூர்பேட்டை நகர்ப் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நாற்காலிகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டு, ஆண்-பெண் தனித்தனி அமரும் பகுதிகள் பிரிக்கப்பட்டன. தடுப்புக் கம்பிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் ஆகியவை முறையாக ஏற்பாடு செய்யப்பட்டன.
தொண்டர்களைத் தலைவர் நேரடியாகச் சந்திக்கும் வகையில் நீண்ட நடைபாதை மேடை அமைக்கப்பட்டுள்ளது. வெயில் கடும் சூழலிலும் தொண்டர்கள் பெருந்திரளாக வந்து குழுமியுள்ளனர். சிலர் கையில் கிடைத்த பொருட்களைத் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு வெயிலைத் தாங்கியபடி அமர்ந்தனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த தொண்டர்கள், தமிழ் புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து ஐநூறு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை நகரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுத் திடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்தார்.
இதையும் படிங்க: தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!
அவரது வருகை மாநாட்டுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. கையில் தீப்பந்தத்தை ஏந்தியபடி அவர் நடைபாதை மேடை வழியாக ரேம்ப் வாக் சென்றார். தொண்டர் படைக்கு மத்தியில் அவர் நடந்து சென்றபோது சுற்றுமுற்றும் எழுச்சி முழக்கங்கள் எழுந்தன. கையசைத்து தொண்டர்களை வாழ்த்திய அவர், அவரது வருகையால் திடல் முழுவதும் உற்சாக அலை அடித்தது. தீப்பந்தம் ஏந்திய அந்த நடை, தமிழ்த் தேசிய எழுச்சியின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. முன்னதாக சென்னையில் தொடங்கப்பட்ட தமிழ்த் தேசிய சுடர் தொடர் ஓட்டம் இம்மாநாட்டிற்கான முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அந்தச் சுடரின் தொடர்ச்சியாகவே தலைவர் தீப்பந்தத்தை ஏந்தி வந்தார் என்ற உணர்வு தொண்டர்களிடையே நிலவியது.
இதையும் படிங்க: "தட்டுங்கள் திறக்கப்படும்"..! FCRA எதிர்ப்பு... முதல்வர் விஜய்க்கு பேரவையில் வன்னியரசு பாராட்டு.!