×
 

ஆட்சி தவறான பாதைக்கு சென்றால் ஆதரவு வாபஸ்! தவெக-விற்கு விசிக எச்சரிக்கை!

தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றால் நிச்சயம் ஆதரவு வாபஸ் பெறப்படும் என விசிக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைத் தவெக தலைவர் விஜய் திரட்டியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிக முக்கியமான மற்றும் எச்சரிக்கையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுவதைத் தடுக்கவும், மக்கள் மீது மீண்டும் ஒரு தேர்தலைத் திணிக்காமல் இருக்கவும் தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ள விசிக, அதே வேளையில் ஒரு வலிமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. 

மக்கள் முடிவு தவெக-வைத் தனிப்பெரும் கட்சியாகத் தேர்வு செய்துள்ளது. அதனை மதிப்பது ஜனநாயகக் கடமை. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியையும், தேவையற்ற மறுதேர்தலையும் தவிர்க்கத் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதுதான் தற்போதைய ஒரே வழி.

இதையும் படிங்க: புதிய அரசு அமைய ஆதரவு! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அதிகாரப்பூர்வ அறிக்கை!

தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றாலோ அல்லது கொள்கை முடிவுகளில் மாறுபட்டாலோ, நிச்சயம் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என விசிக அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்கவே ஆதரவு எனத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது விசிக-வும் அதே போன்றதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 121 எம்.எல்.ஏ-க்களின் பலத்துடன் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்றாலும், கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய ‘நிபந்தனை’ மற்றும் ‘கண்காணிப்பு’ ஆகியவற்றிற்கு உட்பட்டே அவர் தனது ஆட்சியைத் தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் கூட்டணிக் கட்சிகளால் கூர்ந்து கவனிக்கப்படும் என்பதையே விசிக-வின் இந்தப் பதிவு உணர்த்துகிறது. நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share