வெற்று வாக்குறுதிகள்... நடுரோட்டில் விவசாயிகள்..! பிரச்சனைகளை அடுக்கிய வேல்முருகன்..!
தவெக வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்த வேல்முருகன் விவசாயிகள் நிலை பற்றி கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், டிராக்டர்களைக் கொண்டு சாலையை மறித்தும், காய்ந்து கருகிய வாழை மரங்களைச் சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.அணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது கடைமடை விவசாய நிலங்களுக்கு உரிய காலத்தில் பாசன நீர் சென்று சேராதது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் அலட்சியமும் பொறுப்பின்மையுமே ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததும், நீர் பங்கீட்டு அட்டவணை முறையாகப் பின்பற்றப்படாததுமே பல நூறு ஏக்கர் பரப்பளவிலான வாழைப் பயிர்கள் கண்முன்னே கருகிக் கருகிப் போனதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.கடன் வாங்கி, வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள் கருகிப் போனதால், விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது என வேல்முருகன் குறிப்பிட்டார். அதிகாரத்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்ததன் விளைவாகவே உழவர்கள் இன்று நடுரோட்டில் இறங்கிப் போராடும் துயர நிலைக்கு ஆளாகியுள்ளனர் என அவர் வருத்தம் தெரிவித்தார்.
எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வெறுமனே வெற்று வாக்குறுதிகளோடு கடந்து போகாமல், ஒவ்வொரு விவசாய நிலத்தையும் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறையினர் உடனடியாகக் கள ஆய்வு செய்து, கருகிய வாழைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை எவ்வித இழுத்தடிப்பும் இன்றி உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
இதையும் படிங்க: முதல்வருக்கு தூக்கமே இல்ல..! குறைகள் தீர்க்கப்படும்.. அமைச்சர் ஆதவ் உறுதி..!!
.பாசன நீர் முறைப்படுத்தப்படாததற்கும், கடைமடை வரை தண்ணீர் திறந்து விடப்படாததற்கும் காரணமான பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது உரிய துறைசார் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.உழவர்களின் நியாயமான கண்ணீருக்கும் கொந்தளிப்பிற்கும் மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட விவசாயத் தோழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சாம்பாரில் சாணி பவுடர்..! பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை... எச்சரிக்கும் வானதி சீனிவாசன்.!!