எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது... கலங்காத நண்பா.. விஜய்க்கு தாடி பாலாஜி ஆதரவு..!!
கலங்காதே நண்பா என விஜய்க்கு ஆதரவாக தாடி பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்பான சம்பவமாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியரின் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்போது பிரிவுக்கு வழிவகுத்துள்ளது.
சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, 2021 ஏப்ரல் மாதத்தில் ஒரு நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதை கண்டுபிடித்ததாகவும், அதை கண்டித்த பிறகும் அவர் அந்த உறவைத் தொடர்ந்ததாகவும், இரக்கமின்றி நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனக்கு ஆழமான மனவேதனை ஏற்பட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மன உளைச்சல், உணர்ச்சி ரீதியான புறக்கணிப்பு, உடல் ரீதியான உறவு இல்லாமை போன்ற காரணங்களால் விவாகரத்து கோருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் தனது சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் தன்னை புறக்கணித்ததாகவும், அந்த நடிகையுடன் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டதாகவும், அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அங்கீகரித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் விஜய்யை ஏப்ரல் 20ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியானதும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சிலர் சங்கீதாவின் குற்றச்சாட்டுகளை ஆதரித்து விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதையும் படிங்க: சில சனியன் சகடையால் விஜய் வாழ்க்கையில் பிரச்சனை..!! பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி..!
மற்றொரு தரப்பினர் இதை அரசியல் சதியாகவும், தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய்யின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகவும் கருதினர். இத்தகைய சர்ச்சைக்கு மத்தியில், நடிகரும் விஜய்யின் பால்யகால நண்பருமான தாடி பாலாஜி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "எதுவும் மாறட்டும்... உண்மை மட்டும் மாறாது, எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது. இன்று சோதனை என்றாலும் நாளை வெற்றி நிச்சயம், கலங்காதே நண்பா... உன் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்" என்று எழுதியுள்ளார். இந்த பதிவு விஜய்யின் ரசிகர்களிடையே ஆறுதலாகவும், அவரது நட்பின் உறுதியை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது. தாடி பாலாஜியின் இந்த ஆதரவு, விஜய் மீதான குற்றச்சாட்டுகள் மத்தியில் அவருக்கு தனிப்பட்ட அளவில் உள்ள நம்பிக்கையையும் நட்பையும் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!