அதிகாலையில் மேம்பாலத்தில் நடந்த கோரம்... ஆம்னி பஸ்ஸுக்குள் சென்ற கார்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் 2 பேர் துடிதுடித்து பலி...!
விழுப்புரம் சிந்தாமணி ரயில்வே மேம்பாலத்தில் அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிந்தாமணி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஈச்சர் வாகனம், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து நடந்துகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த ஆம்னி வேன், விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தின் மீது ஏறி நின்றது. இதைத் தொடர்ந்து, ஆம்னி வேனின் பின்னால் சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ஸ்விப்ட் கார், ஆம்னி வேனின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதன் தாக்கத்தால், ஸ்விப்ட் காரின் முன்பகுதி ஆம்னி வேனின் பின்புறத்திற்குள் புகுந்தது. இதில் ஸ்விப்ட் காரில் பயணித்த மூவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பின்னர், ஸ்விப்ட் காரின் பின்னால் வந்த ஃபோர்ஸ் வாகனமும், ஸ்விப்ட் காரின் மீது மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து சுமார் ஐந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: குதிரை பேரமா? - உங்க நெஞ்சுல கையை வச்சு சொல்லுங்க... இபிஎஸுக்கு இடியை இறக்கிய செங்கோட்டையன்...!
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் மற்றும் ஸ்விப்ட் காரில் பயணித்த ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், ஸ்விப்ட் காரில் பயணித்த இரண்டு பேரும், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் நிகழ்ந்த இந்த தொடர் விபத்து, விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15 உயிர்களை பறித்த Vietnam விபத்து..! நிவாரணம் அறிவித்த லாவா நிறுவனம்..!