×
 

"பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை 'Loading 2.0' மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

பத்து தோல்வி பழனிச்சாமிக்கும், மொத்த தோல்வி மோடிக்கும் மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டின் மக்கள் என்னும் மிகப்பெரிய சக்தியை கொண்டு தோற்கடிப்போம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குத் திமுக தனது போர் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற ‘Loading 2.0’ என்ற பிரம்மாண்டமான தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) மற்றும் சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், வரும் தேர்தல் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்கும் டெல்லியின் ஆதிக்கத்திற்கும் இடையிலான போர் எனப் பிரகடனம் செய்தார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்பது வெறும் சமூக வலைதளப் பக்கம் அல்ல; அது கழகத்தைக் காக்கும் காவல் அரண். கொள்கையும் லட்சியமும் இல்லாமல் பொய்களை வைரஸாகப் பரப்பும் கூட்டத்திற்கு எதிராக நீங்கள் 'ஆன்டி-வைரஸ்' போலச் செயல்பட்டு வருகிறீர்கள். அதிமுக, பாஜகவை போலப் பொய்களைப் பரப்புவது நமக்கு வேலையல்ல; அவர்கள் பரப்பும் அவதூறுகளை ஆதாரத்துடன் முறியடிப்பதே நமது பணி என்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை 'பத்து தோல்வி பழனிச்சாமி' எனச் சாடிய உதயநிதி, அவர் பாஜகவின் 'முரட்டு பக்தராக' இருப்பதாகவும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய பட்ஜெட்டைப் படிக்காமலேயே அவர் பாராட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுக செய்யும் காரியங்களைப் பார்த்தால் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரே அழுதிருப்பார் என அவர் எள்ளி நகையாடினார்.

இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் திருப்பம்.... இரட்டை இலையை பிடித்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மோடி, அமித்ஷா போன்றவர்கள் அடிக்கடி தமிழகம் வருவார்கள்; தமிழில் பேசி ஏமாற்றுவார்கள். ஆனால், இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையிலான போர். பத்து தோல்வி பழனிச்சாமிக்கும், மொத்த தோல்வி மோடிக்கும் மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனச் சூளுரைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கி, கூடுதல் நிதியையும் சேர்த்து ரூ. 5,000 வழங்கித் தாய்மார்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் நமது முதல்வர். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது திராவிட மாடல் அரசின் பயனாளி இருப்பார்கள். இந்தத் திட்டங்களின் பலத்தால் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைப்பது உறுதி; தலைவர் மீண்டும் முதலமைச்சராவார் எனத் தன்னம்பிக்கை தெரிவித்தார்.

ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திராவிடக் கொள்கைகளைப் பரப்புவதில் ஐடி விங்கின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், செப்டம்பர் மாதத்தைத் 'திராவிட மாதமாக'க் கொண்டாடி நமது வரலாற்றை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா மற்றும் ஐடி விங் நிர்வாகிகள், மூத்த ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு திமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share