×
 

தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென அதிகரிப்பு... அதிரவைக்கும் பகீர் பின்னணி...!

கிலோவுக்கு ரூ.10 வரை, மூட்டைக்கு ரூ.300 வரை அரிசி விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது 

தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், ஏழை மற்றும் எளிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த மாதம் ஒரு கிலோ பாஸ்மதி அரிசி ரூ.90-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.95-க்கு விற்பனையாகிறது. அதேபோல், கிலோ ரூ.50-க்கு விற்பனையான பொன்னி அரிசி தற்போது ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. பச்சரிசி, சீரகச் சம்பா உள்ளிட்ட பல்வேறு ரக அரிசிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், 26 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.200 முதல் அதிகபட்சமாக ரூ.300 வரை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது பொன்னி அரிசி கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரையும், சீரகச் சம்பா அரிசி கிலோவுக்கு ரூ.15 வரையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் அனைத்து ரக அரிசிகளின் விலையும் அதிகரித்துள்ளன" என்றனர்.

இதையும் படிங்க: "அத்துமீறிய மாமனார்"..! ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்த இளம் மருமகள்..! சென்னையில் பரபரப்பு..!!

இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் மேலும் கூறுகையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டண உயர்வு ஆகியவையும் அரிசி விலை அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர்கள் கூறினர்.

மேலும், "வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய நெல் அறுவடை செய்யப்பட்டு அதிகளவில் அரிசி சந்தைக்கு வரும். அப்போது விலை குறையும். ஆனால் தற்போது விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும், சுங்கக் கட்டண உயர்வும் விலையை மேலும் அதிகரித்துள்ளன. ஆந்திராவில் இருந்து அதிகளவில் அரிசி வந்தபோது தமிழ்நாட்டு அரிசியின் விலையும் விற்பனையும் ஓரளவு குறைந்திருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது" என்றனர்.

அரிசி விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ள இல்லத்தரசிகள், "எதிர்காலத்தில் உணவு என்பது எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று வேதனை தெரிவித்தனர்.

கடந்த மாதம் ரூ.1,400-க்கு வாங்கிய அரிசி மூட்டை, இந்த மாதம் ரூ.1,600 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கேட்டால், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியின் விலை இவ்வளவு உயர்ந்தால் எப்படி சமாளிப்பது? என மக்கள் புலம்பு வருகின்றனர். 

அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எரிபொருள் விலை மற்றும் சுங்கக் கட்டணத்தை குறைத்தாலே இந்த விலை உயர்வு கணிசமாக குறையும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆதார் டு பாஸ்போர்ட் வரை... இன்று முதல் பல்வேறு கட்டணங்களில் அதிரடி மாற்றம்... முழு விவரம் இதோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share