×
 

திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றியைப் பெற்று 108 தொகுதிகளில் கோலோச்சியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு இறங்கியது. மேலும், கடந்த தேர்தலைவிட அதிமுகவின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். 

தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு அங்கு வெற்றி பெற்றார். இந்தத் தோல்வி திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோல்விக்குப் பின்னர், ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதிக்கு நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உணர்ச்சி பொங்க வரவேற்பு அளித்தனர். பலர் கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். தற்போது திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அவர் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகக் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக திருச்சியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்களின் அனுதாப அலையைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என திமுக தரப்பு நம்புவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், தவெக தரப்பில் லால்குடி தொகுதியில் தோல்வியைத் தழுவிய முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை இந்த இடைத் தேர்தலில் களமிறக்கும் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க: சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

மேலும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை வேட்பாளராக நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தனி துறை உருவாக்கி, அதன் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாம் என கட்சி நிர்வாகிகள் தலைவர் விஜய்க்கு யோசனை தெரிவித்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த சகாயத்தை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ராஜினாமா செய்தால், இந்த இடைத் தேர்தல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாற்றங்கள் தமிழக அரசியல் சமன்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். த.வெ.க.வின் வெற்றி மற்றும் தி.மு.க.வின் தோல்விக்குப் பின்னான இந்த இடைத் தேர்தல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கியமானதாக அமையும்.

இதையும் படிங்க: ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share