மாநில உரிமைகள் பறிப்பு! புதிய கனிமவள சட்டத்திருத்தத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!
மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பறிக்கும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தம் 2026-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளைப் பறித்து, இயற்கை வளங்களைப் பெருநிறுவனங்கள் தங்குதடையின்றிக் கொள்ளையடிக்க வழிவகுக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 'சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026'-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தம், கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள வரி, செஸ் மற்றும் இதர வருவாய் அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் ஆபத்தான நோக்கம் கொண்டது எனச் சாடியுள்ளார்.
கனிம உரிமைகள் மற்றும் அதற்கான வரி விதிப்பில் மாநிலங்களின் அதிகாரத்தை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் 2024-ல் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்து, நயவஞ்சக முறையில் மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறிக்கும் எதேச்சதிகாரச் செயலாகவே இது அமைந்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பங்கேற்க தடை... இடதுசாரி கட்சிகள் தலையில் இடியை இறங்கிய விஜய்... கரப்பான் பூச்சிக்கும் மரண அடி...!
சுரங்கத்துறை முதலீடு மற்றும் ஒழுங்குமுறை என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக மாநிலங்களின் உரிமைகளை முடக்குவது தேச விரோதச் செயல் எனத் தெரிவித்த அவர், கனிம வளம் நிறைந்த தமிழ்நாட்டின் பொருளாதார வருவாயையும் நிதித் தன்னாட்சியையும் இச்சட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கும் என எச்சரித்துள்ளார். மேலும், இயற்கை வளங்கள் என்பது குறிப்பிட்ட சில வணிக நிறுவனங்களின் லாபத்திற்கானவை அல்ல என்றும், அவை மக்களின் பொதுச் சொத்து என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, வன உரிமைகள் சட்டம் 2006-ன் கீழ் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரியக் குடிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், கிராம சபையின் அதிகாரங்களையும் புறந்தள்ளிவிட்டு சுரங்கத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனச் சாடியுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டின் நலனையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் சீர்குலைக்கும் இந்த ஆபத்தான கனிமவளச் சட்டத்திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், மத்திய அரசு இதனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதா..? சபாநாயகர் கருத்துக்கு சிபிஐ வீரபாண்டியன் எதிர்ப்பு..!