“அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!
திமுகவிற்கு சிறிதளவாவது மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான ஸ்ரீதர் வேம்பு, தனது பள்ளி தொடங்கும் முயற்சிகளில் திமுக ஆட்சியில் சந்தித்த சிரமங்கள் மற்றும் ஊழல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். திமுக தரப்பினர் தனது குற்றச்சாட்டை பொய் என முத்திரை குத்தியதற்கு பதிலடி கொடுத்த அவர், உண்மை நிகழ்வுகளை தெளிவுபடுத்தியுள்ளார்.
கலைவாணி கல்வி மையம் சார்பில் தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கிராமப்புற மாணவர்களுக்காக இலவச NIOS (தேசிய திறந்த நிலைப் பள்ளி) பள்ளிகளை ஸ்ரீதர் வேம்பு நடத்தி வருகிறார். இந்தப் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றன. தேனியில் உள்ள பள்ளி முதலில் ஒரு நேர்மையான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியால் தொடங்கப்பட்டது. சிறந்த உள்கட்டமைப்புடன் இயங்கிய இந்த CBSE பள்ளிக்கு மாநில அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற அதிகப்படியான பணம் கோரப்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
பணம் கொடுக்க முடியாத காரணத்தால் அந்த அதிகாரி பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவரது அறக்கட்டளையை ஏற்று, ஜோஹோ குழு இலவச NIOS பள்ளியை அங்கு நடத்தத் தொடங்கியது. தென்காசியில் உள்ள பள்ளியைப் போலல்லாமல், தேனி பள்ளிக்கு திமுக ஆட்சியில் அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்பட்டன. மாநில அரசின் அங்கீகாரம் பெற முயன்றபோதும், பணம் தேவைப்பட்டதால் விவகாரம் நிலைத்து நின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு மோசமான அரசியல் - வைகோ ஆவேசம்!
மேலும், தென்காசியில் புதிய பள்ளி கட்டிடங்களை நிர்மாணிக்க DTCP (நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சித் திட்ட இயக்ககம்)-யிடம் அனுமதி கோரியிருந்தனர். திமுக ஆட்சியில் DTCP-யில் நிலவிய ஊழல் காரணமாக இந்த அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், ஆட்சி மாறிய உடனேயே அனுமதி கிடைத்தது. மேலும், எந்தவித பணமும் கொடுக்காமல் அனுமதி வழங்கப்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு பாராட்டு தெரிவித்தார்.
“திமுக ஆட்சியில் இருந்தவரை DTCP அனுமதி கிடைக்கவில்லை. ஆட்சி மாறியவுடன் தானாகவே கிடைத்தது. எந்த அனுமதிக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசுத் தரப்பினர் தெரிவித்தனர். இந்த மாற்றத்தை நான் பொதுவெளியில் பாராட்ட வேண்டும்,” என்று அவர் தனது பதிவில் எடுத்துரைத்தார்.திமுகவினர் தனது குற்றச்சாட்டை “பொய்” என்று சொல்வதை ஸ்ரீதர் வேம்பு வன்மையாக மறுத்தார். தான் ஒரு தொழில்நுட்ப ஆர்வலர் என்றும், கிராமப்புறங்களில் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தன்னிறைவை ஊக்குவிப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாகவும் கூறினார்.
“நான் தமிழ் வழிப் பள்ளிகளில் படித்தவன். ஏதுமில்லாமல் வளர்ந்தவன். சனாதன நாகரிகத்தின் ஆன்மாவான கிராமங்களுக்கு புத்துயிர் அளிப்பதே என் நோக்கம்,” என்று அவர் வலியுறுத்தினார். தனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பயப்படவில்லை என்றும், “மரணத்திற்கு அஞ்சாதவன் திமுகவுக்கு ஏன் அஞ்ச வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பிய ஸ்ரீதர் வேம்பு, தொழில்நுட்பப் பணிகளுக்குத் திரும்புவதாக தனது பதிவை நிறைவு செய்தார்.
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் அனுமதி பெறும் செயல்முறையில் நிலவும் ஊழல் பிரச்சினைகளை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ஸ்ரீதர் வேம்பு போன்ற தொழிலதிபர்களின் சமூகப் பங்களிப்பு முயற்சிகளுக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!