×
 

காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா வெள்ளியும், யஷ் வீர் சிங் வெண்கலமும் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தருணங்களை வழங்கியது. உலகின் முன்னணி வீரர்கள் மோதிய இந்தப் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்கா பதிரகே தங்கப் பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைத்தார்.

இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும், இளம் வீரர் யஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி இந்தியாவுக்கு இரட்டை பெருமை சேர்த்தனர்.

போட்டியின் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருமேஷ் தரங்கா பதிரகே, தனது இரண்டாவது முயற்சியிலேயே 89.75 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். அதன் பிறகு எந்த வீரராலும் அந்த சாதனையை முறியடிக்க முடியாததால், காமன்வெல்த் போட்டியில் இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுத் தந்தார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து பதக்கங்களை அள்ளும் இந்தியா... காமன்வெல்த் அரங்கில் கலக்கும் வீரர்கள்! இன்று நீரஜ் சோப்ராவை நோக்கி தேசத்தின் பார்வை!

ஒலிம்பிக் சாம்பியனும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமுமான நீரஜ் சோப்ரா, தனது சீசனின் சிறந்த செயல்பாடாக 85.83 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கடைசி முயற்சி வரை தங்கத்திற்காக கடுமையாகப் போராடிய போதிலும், இலங்கை வீரரின் 89.75 மீட்டர் சாதனையை அவரால் எட்ட முடியவில்லை.

இந்தப் போட்டியின் மிகப்பெரிய ஆச்சரியமாக இந்தியாவின் இளம் வீரர் யஷ் வீர் சிங் உருவெடுத்தார். முதல் ஐந்து முயற்சிகளுக்குப் பிறகும் பதக்கப் பட்டியலில் இடம் பெறாத அவர், கடைசி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது தனிநபர் சிறந்த சாதனையை பதிவு செய்தார்.

இதன் மூலம் ஒலிம்பிக் பதக்க வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸை பின்னுக்குத் தள்ளி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஒரே போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் பதக்கம் வென்றது இந்திய தடகளத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

இதற்கிடையில், கடந்த காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கு இந்தப் போட்டி ஏமாற்றமாக அமைந்தது. முதல் மூன்று முயற்சிகளில் அதிகபட்சமாக 77.41 மீட்டர் மட்டுமே எறிந்ததால், முதல் எட்டு இடங்களுக்குள் கூட முன்னேற முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறினார்.

போட்டிக்குப் பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார். காயங்களுடன் விளையாடி வந்தாலும், இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருவது பெருமை அளிப்பதாகவும், குறிப்பாக யஷ் வீர் சிங் தனது சிறந்த சாதனையை மிக முக்கியமான போட்டியில் பதிவு செய்தது இந்திய தடகளத்தின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்! கணக்கை தொடங்கிய ஜாண்டு குமார்! பிரதமர் மோடி பாராட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share