×
 

வந்துட்டான்யா.. வந்துட்டான்..!! CSK-வின் அடுத்த போட்டியில் அணிக்கு திரும்புகிறார் 'சிக்சர்' மன்னன் பிரெவிஸ்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

ஏப்ரல் 11ம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் இருந்து விளையாட போவதை உறுதி செய்தார் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ்.

ஐபிஎல் 2026 தொடர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் வலுவான தொடக்கத்துடன் வெற்றி பெற்று வருகின்றன. இதற்கு நேர்மாறாக, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியுள்ளது, இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தொடக்கப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்றது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மூன்றாவது போட்டியில் ஆர்சிபியிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேலும் ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இந்த மோசமான தொடக்கம் கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறையாவது சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்த ரசிகர்கள், தொடர் தோல்விகளால் அதிருப்தியில் உள்ளனர்.

இதையும் படிங்க: வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

சிஎஸ்கே அணியின் பேட்டிங் துறை இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரும் எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இதுவரை சிறப்பாக விளையாடவில்லை. கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டும் தனது சிறந்த பார்மை வெளிப்படுத்தாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங் பிரச்னைக்கு அப்பால், பவுலிங் துறையும் சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த சீசனில் விக்கெட்டுகளை அள்ளிய ஸ்பின் பவுலர் நூர் அகமது இந்த முறை ரன்களை அதிகம் விட்டுக் கொடுத்து வருகிறார். நியூசிலாந்தின் ஸ்விங் சிறப்பு வீரர் மேட் ஹென்ரியும் விக்கெட் எடுப்பதில் திணறி, ரன்களை வாரி வழங்கி வருகிறார். மேலும், அணியின் பீல்டிங் செயல்பாடும் மெல்லியதாகவே உள்ளது; எளிதில் கிடைக்கும் கேட்ச்களை கோட்டைவிட்டு வருவது அணியின் தோல்விக்கு மேலும் பங்களித்துள்ளது.

இந்த சூழலில், சிஎஸ்கே அணி தனது நான்காவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை சேப்பாக்கில் உள்ள தனது சொந்த மைதானத்தில் சந்திக்க உள்ளது. டெல்லி அணி இதுவரை இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. எனவே, இந்த மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் மிக முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த முக்கியப் போட்டியில் அணியில் பல மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஏலத்தில் பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட கார்த்திக் சர்மா இதுவரை எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவருக்குப் பதிலாக, காயத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்த 'சிக்சர்' மன்னன் டெவால்ட் பிரெவிஸ் அணியில் திரும்ப இணைய உள்ளார். பிரெவிஸின் வருகை மிடில் ஆர்டர் பேட்டிங்குக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர் டெல்லிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், டெல்லி அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. தோனி விளையாடாவிட்டால், சஞ்சு சாம்சன் வழக்கம்போல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார்.

மற்ற வீரர்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தனது பயணத்தை மீட்டெடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர் தோல்விகளுக்குப் பிறகு, சென்னை மைதானத்தில் டெல்லியை எதிர்கொள்ளும் இந்த வாய்ப்பு அணிக்கு மிக முக்கியமானதாக அமையும். அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது. ரசிகர்களின் ஆதரவுடன் சிஎஸ்கே மீண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: சிஎஸ்கே-வை வீழ்த்தியது பஞ்சாப்! சேப்பாக்கத்தில் சென்னைக்கு தொடர் தோல்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share