இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜானி பாரிஸ்டோ களமிறங்கினர். ஜானி பாரிஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் சிக்ஸர்களை பறக்க விட ரோகித் சர்மா தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சூரியகுமாரி யாதவ் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 பந்துகளில் 33 எடுத்தார். மறுபுறம் ரோகித் சர்மா 28 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்தார். இளம் வீரர் திலக் வர்மா மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டு 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அதிரடி காட்டிய ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருடைய பேட்டிங்கில் 9 பவுண்டரி நான்கு சிக்ஸர் அடங்கும். இறுதி கட்டத்தில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டி, 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.
இதையும் படிங்க: மும்பை அணியில் மூன்று மாற்றங்கள்... கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்!!
ஹர்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் கில் 1 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த குசல் மெண்டிஸ் 20 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் சாய் சுதர்சன் அரைசதம் அடித்த நிலையில் 80 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ரூதர்போர்டு மற்றும் ராகுல் திவேதியா ஜோடி சேர்ந்தனர்.
இதில் ரூதர்போர்டு 24 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஷாரூக் கான் களம் இறங்கினார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது. நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாம் தகுதி சுற்றில் மும்பை அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோத உள்ளது.
இதையும் படிங்க: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது RCB… அபார ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!