×
 

பீகார் படைத்த புதிய கிரிக்கெட் அதிசயம்.. இந்திய டெஸ்ட் அணியில் இணைகிறாரா 15 வயது ஆட்ட நாயகன்..??

சச்சின் டெண்டுல்கர் பாணியில், வைபவ் சூர்யவன்ஷியையும் இளம் வயதிலேயே டெஸ்டில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் உலகம் தற்போது ஒரு இளம் நட்சத்திரத்தின் பெயரால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளார். உள்ளூர் மட்டத்தில் தொடங்கி சர்வதேச இளையோர் அரங்கம் வரை அவர் படைத்த சாதனைகள், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் விதமாக அமைந்துள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில், குறிப்பாக யு-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 55 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இது இந்திய யு-19 அணியின் சார்பில் உலகக் கோப்பையில் மிக வேகமான சதமாகும். மேலும், 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, யு-19 கிரிக்கெட்டில் வேகமான 150 ரன்களையும் பதிவு செய்தார். 

இதற்கு முன்பு விஜய் ஹசாரே டிராபியில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்து, ஆண்கள் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் இளைய சதமடிப்பாளர் என்ற சாதனையையும் நிலைநாட்டினார். அந்த இன்னிங்ஸில் அவர் 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

சச்சின் பாதையில் வைபவ்?

1989-ல் 16 வயதில் சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் தொடரில் அறிமுகப்படுத்திய பிசிசிஐ முடிவு இந்திய கிரிக்கெட்டை மாற்றியமைத்தது. அதேபோன்ற துணிச்சலான முடிவை வைபவ் விஷயத்திலும் எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இடது கை பேட்ஸ்மேனான வைபவ், அணிக்கு கூடுதல் பலத்தை அளிப்பார். இருப்பினும், தொடக்க வீரராக நேரடியாகக் களமிறக்கி அதிக அழுத்தம் கொடுப்பதை விட, மிடில் ஆர்டரில் தொடங்கி அவரது தன்னம்பிக்கையை வளர்க்கலாம் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் அவரை ₹1.1 கோடிக்கு வாங்கியது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 14 வயதில் ஐபிஎல் அறிமுகம் செய்து கொண்ட அவர், 35 பந்துகளில் சதம் அடித்து இளைய டி20 சதக்காரர் என்ற பெருமையையும் பெற்றார். ரஞ்சி டிராபியிலும் இளம் வயதில் அறிமுகமான அவர், பீகார் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிசிசிஐ இவரை டெஸ்ட் அணியில் நீண்ட கால முதலீடாகப் பார்க்கிறது.

இளம் வயதிலேயே உலகத் தரம் வாய்ந்த பவுலர்களுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் வைபவ், இந்திய அணியின் அடுத்த 'ரன் மெஷின்' ஆக உருவெடுப்பாரா என்பது இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். ஆனால், அவரது திறமைக்கு முன்னால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்கெனவே கைதட்டத் தொடங்கியுள்ளனர். வைபவின் பயணம் இளம் தலைமுறைக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது. சரியான பயிற்சி, மன உறுதி மற்றும் பிசிசிஐ-யின் ஆதரவுடன் இவர் இந்திய கிரிக்கெட்டின் புதிய அத்தியாயத்தை எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share