AI வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியலையா..?? தாராளமா வெளியே போகலாம்..!! ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்..!!
தற்போது கூகுள் நிறுவனம் மீண்டும் விருப்ப ஓய்வு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
கூகுள் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேடுபொறி (சர்ச் இன்ஜின்) துறையில் மட்டுமின்றி, யூடியூப், ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற பல்வேறு சேவைகள் மூலமும், ஸ்மார்ட்போன் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்வதன் மூலமும், சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, அமேசான், மெட்டா உள்ளிட்ட பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்து வருகின்றன. ஆனால் கூகுள் இதற்கு சற்று வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.
'விருப்ப ஓய்வு' அல்லது 'வாலன்டரி எக்சிட் ப்ரோகிராம்' (Voluntary Exit Program / Buyout) என்ற பெயரில், ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கான ஊதியம், பிற நிதி நன்மைகள் மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகளை வழங்கி, தாமாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேற வாய்ப்பளிக்கிறது. இது நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும், ஊழியர்களுக்கு புதிய வேலை தேடுவதற்கு போதுமான நேரத்தையும் வசதியையும் அளிப்பதற்கும் உதவுகிறது.
இதையும் படிங்க: பைக் லவ்வர்ஸ்களுக்கு அசத்தல் அப்டேட்..!! ரூ.1.94 லட்சத்தில் 2026 KTM டியூக் 200 அறிமுகம்..!!
கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். இதில் மென்பொருள் பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், விளம்பரத் துறை நிபுணர்கள், விற்பனைப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் அடங்குவர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் அதன் தாக்கத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இத்தகைய விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
விருப்ப ஓய்வை ஏற்க மறுத்தால், நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மறைமுகமாக எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் மீண்டும் இத்தகைய விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி (Chief Business Officer) பிலிப் ஷிண்ட்லர் (Philipp Schindler) அனுப்பிய உள் மின்னஞ்சலில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில், "2025-ஆம் ஆண்டில் நீங்கள் அனைவரும் சாதித்த சாதனைகளால் நாம் வலுவான நிலையில் 2026-ஐத் தொடங்குகிறோம். ஆனால் போட்டி சூழல் மிக வேகமாக மாறி வருகிறது; முன்னேற்றத்தின் வேகம் மின்சாரம் போன்றது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, செயற்கை நுண்ணறிவை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், "நிறுவனத்தின் தற்போதைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் அல்லது நிறுவன முடிவுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்காதவர்கள் வெளியேறலாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, க்ளோபல் பிசினஸ் ஆர்கனைசேஷன் (Global Business Organization - GBO) பிரிவில் உள்ள சில குழுக்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த விருப்ப ஓய்வு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்வு அணிகள் (Solutions teams), விற்பனைப் பிரிவு, நிறுவன வளர்ச்சி (Corporate Development) உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் பிரிவுகள் (Customer-facing roles) இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
இந்த நடவடிக்கை, AI-ஐ மையமாகக் கொண்டு நிறுவனத்தை மிக வேகமாக மாற்றியமைக்கும் கூகுளின் உத்தியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பலமுறை இதேபோன்ற விருப்ப ஓய்வு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இது தொழில்நுட்பத் துறையில் தொடர்ச்சியான மாற்றங்களையும், ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டிய தேவையையும் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: ட்ரெண்டிங்கில் AI Caricature..!! போட்டோவை உருவாக்குவது எப்படி..?? ஆபத்தா இல்ல பாதுகாப்பா..??