10-இன்ச் டிஸ்ப்ளே.. சாம்சங் Rollable ஸ்மார்ட்போன்: 2028-ல் உலகின் முதல் புரட்சிகர மாடல் வருகை?
புதுவகை ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z ஸ்லைடு என அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சாம்சங், ஸ்மார்ட்போன் உலகில் அடுத்த கட்ட புரட்சியை உருவாக்கும் வேலையை தீவிரப்படுத்தியுள்ளது. வழக்கமான ஸ்மார்ட்போனில் இருந்து தேவைக்கேற்ப டேப்லெட் அளவுக்கு விரிவடையும் 'ரோலபில்' (rollable) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த சாம்சங் டிஸ்ப்ளே பிரிவு தீவிரமாக உழைத்து வருகிறது. இந்த புதிய சாதனம், மடிக்கும் (foldable) போன்களுக்கு அடுத்த கட்டமாக கருதப்படுகிறது.
தென் கொரிய ஊடகம் மெய்ல் பிசினஸ் வெளியிட்ட தகவலின்படி, சாம்சங் 2028-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் உலகின் முதல் வணிக ரீதியான ரோலபில் போனை அறிமுகம் செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த மாடல் கேலக்ஸி S28 தொடருடன் இணைந்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளக பெயராக கேலக்ஸி Z ஸ்லைடு (Galaxy Z Slide) என அழைக்கப்படும் இந்த சாதனம், திரை உருளும் (rolling) தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்களுக்கு மிகவும் நெகிழ்வான பயன்பாட்டை வழங்கும்.
இந்த ரோலபில் போனின் முக்கிய சிறப்பம்சம் அதன் டிஸ்ப்ளே. அதிகபட்சம் 10 இன்ச் அளவிலான 16:9 விகிதத்தில் உயர் தெளிவுத்திறன் (சுமார் 440 ppi) கொண்ட திரையை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சாதாரண நிலையில் ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் அளவில் இருக்கும் இந்த சாதனம், திரையை உருட்டி விரித்தால் டேப்லெட் போன்ற பெரிய திரை அனுபவத்தை அளிக்கும். இது மல்டி டாஸ்கிங், வீடியோ பார்க்கும், கேமிங் மற்றும் தொழில்முறை பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
இதையும் படிங்க: அடடே..!! விவோ X ஃபோல்டு 6: சீனாவில் அறிமுகமான Foldable ஸ்மார்ட்போன்..!!
சாம்சங் இந்த முதல் மாடலுக்குப் பிறகு 2030-ல் இரண்டாவது தலைமுறை ரோலபில் போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது நிறுவனத்தின் நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாகும்.தற்போது மடிக்கும் போன்கள் பிரிவில் சாம்சங் முன்னிலை வகித்து வரும் நிலையில், சமீப காலத்தில் சவால்கள் எழுந்துள்ளன. சாம்சங் டிஸ்ப்ளேயின் சந்தைப் பங்கு கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் 41.8 சதவீதமாக இருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 27 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தப் பின்னணியில், ரோலபில் தொழில்நுட்பம் நிறுவனத்துக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோலபில் போன்கள் சந்தையில் இன்னும் பரவலாக இல்லாத நிலையில், சாம்சங் முதன்மையான இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த தொழில்நுட்பம் நீடித்து உழைக்கும் தன்மை, திரை பாதுகாப்பு மற்றும் மெல்லிய வடிவமைப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனாலும், சாம்சங் டிஸ்ப்ளேயின் நிபுணத்துவம் இந்த தடைகளை தாண்டி வெற்றியை தரும் என நம்பப்படுகிறது.
இந்த புதிய சாதனம் வெளியானால், ஸ்மார்ட்போன் அனுபவத்தை முழுமையாக மாற்றும். பயனர்கள் ஒரே சாதனத்தில் போன் மற்றும் டேப்லெட் அனுபவத்தை பெற முடியும். சாம்சங் இந்த திட்டத்தில் வெற்றி பெற்றால், 2028 ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அத்தியாயம் தொடங்கும். தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: வெறும் ரூ. 9,999 தான்..!! புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அசத்திய LAVA..!!