×
 

#BREAKING: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. அதிர்ச்சியில் சினிமாத் துறையினர்..!!

நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். இந்த நிகழ்ச்சிகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார். மேடை நாடகங்களில் இருந்து வெள்ளித்திரை நட்சத்திரமாக உயர்ந்த இவரது வாழ்க்கைப் பயணம், சிரிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றது. 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது', 'லொள்ளு சபா' போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மற்றும் காமெடி திறனால் பிரபலமானார். இவை அவரது தொழில்முறை வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியாக அமைந்தன. 

பின்னர், 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்து சினிமாவில் பிரபலமானார். அதன் பிறகு 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து, தனது அடையாளத்தைப் பதித்தார். தனுஷ், அஜித், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து மாரி, இரும்புத்திரை, விஸ்வாசம், வேலைக்காரன், Mr.லோக்கல், சொட்ட சொட்ட நனையுது போன்ற படங்களில் அவரது காமெடி டைமிங் ரசிகர்களை கவர்ந்தது.

தனிப்பட்ட வாழ்க்கையில் ரோபோ சங்கர் ஒரு குடும்ப வாழ்க்கை அமைத்துள்ளார். அவரது மகள் இந்திரஜா சங்கர், தொலைக்காட்சி நடிகையாக இருந்து, கடந்த ஆண்டு கார்த்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2025 ஜனவரியில் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது, ரோபோ சங்கருக்கு தாத்தா ஆகும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் சமூக வலைதளங்களில் பேரனுடன் நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து, உருக்கமான பதிவுகளை எழுதினார்: "உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்" என்று. இது ரசிகர்களிடையே வாழ்த்துகளைப் பொழிந்தது.

இதையும் படிங்க: எளிமையான வரிகள்.. ஆழமான கருத்துக்கள்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்..!!

ஆனால், இவரது வாழ்க்கை சவால்களும் இல்லாமல் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரோபோ ஷங்கருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். பின்னர் உடல்நலம் தேறி மீண்டும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வந்தார்.

இதனிடையே கடந்த செப்டம்பர் 16ம் தேதி அன்று படப்பிடிப்பின்போது திடீரென மயங்கி விழுந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அடடே.. தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரபல மலையாள நடிகர்..! லோகோ சும்மா அள்ளுதே..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share