செல்லப்பிராணியாக அரிய குரங்கு?! நடிகர் விக்ரம் வீடியோவால் வெடித்த புதிய சர்ச்சை! வனத்துறை விசாரணை!
லார் கிப்பன் மரங்களில் வாழும் விலங்காக இருப்பதால், அதன் இயற்கையான வாழ்விடத்துக்கு ஏற்ப போதுமான இடவசதி இல்லாமல் வீட்டில் அல்லது கூண்டில் வளர்ப்பது அதன் இயல்பான வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
விக்ரம் வீட்டில் அரிய லார் கிப்பன் குட்டியா? வைரல் வீடியோவால் வனத்துறை விசாரணை!
சென்னை: அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறப்படும் அரிய வகை லார் கிப்பன் குரங்கு குட்டியுடன் நடிகர் விக்ரம் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிய வனவிலங்கை வீட்டில் வளர்க்க அனுமதி உள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் லார் கிப்பன் குரங்கு குட்டியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. வீடியோ வேகமாக பரவிய நிலையில், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த குரங்கு குட்டியை வீட்டில் வைத்திருக்க தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் உள்ளனவா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கூட்டம்... ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி திடீர் ரத்து! மன்னிப்பு கேட்டார் ஹிப்ஹாப் ஆதி!
விசாரணையில் கிடைத்ததாக கூறப்படும் ஆவணங்களின்படி, அந்த லார் கிப்பன் குட்டி முதலில் மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் சிங் என்பவரிடம் இருந்ததாக தெரிகிறது. அவரிடம் எட்டு லார் கிப்பன் குட்டிகளை பராமரிப்பதற்கான அனுமதி ஆவணங்கள் இருந்ததாகவும், அவற்றின் பூர்வீக நாடாக மலேசியா குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மூன்று குரங்கு குட்டிகளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதனிடம் லைகுராம் சிங் வழங்கியதாகவும், அவற்றில் ஒரு குட்டியே தற்போது விக்ரம் வீட்டில் பராமரிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த பரிமாற்றங்கள் மற்றும் அனுமதி தொடர்பான சட்டப்பூர்வ நிலை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது.
லார் கிப்பன் மரங்களில் வாழும் விலங்காக இருப்பதால், அதன் இயற்கையான வாழ்விடத்துக்கு ஏற்ப போதுமான இடவசதி இல்லாமல் வீட்டில் அல்லது கூண்டில் வளர்ப்பது அதன் இயல்பான வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை தனிநபர்கள் வைத்திருப்பது தொடர்பாக சட்ட விதிமுறைகள் உள்ளதால், உரிய அனுமதி இல்லாமல் பராமரிக்கப்பட்டதா என்பதும் விசாரணையில் முக்கிய அம்சமாகியுள்ளது.
இதுபோன்ற அரிய விலங்குகள் வேறு யாரிடமும் உள்ளனவா, அவற்றின் பரிமாற்றத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரிய வனவிலங்குகளை சட்டவிரோதமாக கடத்துதல் அல்லது இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் குழுக்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை முடிந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போதுதான், லார் கிப்பன் குட்டி நடிகர் விக்ரம் வசம் எவ்வாறு வந்தது மற்றும் அதற்கான அனுமதிகள் முறையாக இருந்தனவா என்பது தெளிவாகும்.
இதையும் படிங்க: 10 தேசிய விருதுகளை அள்ளிய கோலிவுட்! தமிழ் திரையுலகின் வெற்றிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!