×
 

இதற்காக தான் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.. நடிகர் விஷால்!

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் விஷால்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் உள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் அவர் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறும் என தெரிவித்தார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்தும், அந்த பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும், தேர்தலை உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்தக் கோரி நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: என்னாச்சு நடிகர் விஷாலுக்கு..? மேடையிலேயே திடீர் மயக்கம்.. அழகி போட்டியில் பரபரப்பு..!

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட ரூ.25 கோடி செலவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 60% பணிகள் முடிவடைந்துள்ளது.

தங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-2028 புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டால் சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும். எனவே பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பதவி கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பின் விரிவான வாதத்திற்காக வழக்கை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: திருவிழாவில் மயங்கி விழ சரக்கு அடித்ததுதான் காரணமா..! நடிகர் விஷால் சொன்ன விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share