பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!
பிரான்ஸில் நடைபெற்ற “ஏசியன் லெ மான்ஸ்’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற சாதனையை அஜித்குமார் ரேஸிங் அணி படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தனது பல்துறை ஆர்வத்தை மீண்டும் நிரூபித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேசிங்' என்ற சொந்த அணியைத் தொடங்கி சர்வதேச அரங்கில் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டு வருகிறார். துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற அணி, தொடர்ந்து உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேறி வருகிறது.
சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற ஏசியன் லெ மான்ஸ் (Asian Le Mans Series) தொடரில் அஜித்குமார் ரேசிங் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய அணியாக இத்தொடரில் முதன்முறையாகப் பங்கேற்ற அவர்கள், டீம் விராக் உடன் இணைந்து LMP3 வகுப்பில் போட்டியிட்டனர். 13வது இடத்தைப் பிடித்த இந்த அணி, வருங்கால போட்டிகளில் இன்னும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. அஜித்குமாரின் குடும்பத்தினர் இந்த முக்கிய நிகழ்வைக் காண பிரான்ஸ் சென்றிருந்தனர்.
இதையும் படிங்க: அன்னையின் இறுதி சடங்கு! கண்ணீருடன் அஜித் குமார்! பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!
அஜித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அணியைப் பற்றி பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார். “எனது ‘ரெடான்ட்’ (Red Ant) அணியின் மெக்கானிக்குகள், பொறியாளர்கள் மற்றும் சக வீரர்கள் அனைவரும் ஒரு சிறந்த குடும்பமாகச் செயல்படுகிறோம். இவர்களுடன் இருப்பது எனக்கு இரண்டாவது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது” என்று கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வரும் அவர், குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கும் நிலையில், ரேசிங் கடமைகளுக்காக ஐரோப்பாவில் அதிக நேரம் செலவிடுகிறார். அடுத்த ஆண்டுக்கான திட்டங்களை ஏற்கெனவே தயாரித்து வரும் அவர், ஏசியன் லெ மான்ஸ், இ.எல்.எம்.எஸ் (ELMS) உள்ளிட்ட தொடர்களில் தொடர்ந்து பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். கிரெவென்டிக் (Creventic) தொடரில் தன்னால் முடியும் வரை ஆண்டுதோறும் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த ரேசிங் பயணத்துக்கு இடையே அஜித்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சோகம் நிழலாடியது. மே 30 அன்று அவரது தாயார் மோகினி மணி அவர்கள் வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக 85 வயதில் காலமானார். தமிழக முதலமைச்சர் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர். இந்த இழப்பு அவருக்கு பெரும் வருத்தத்தை அளித்தாலும், ரேசிங் மீதான ஆர்வம் அவரை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து நடத்திச் செல்கிறது.
அஜித்குமாரின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் (Ajithkumar Racing) பிரான்ஸ் ரேசிங் தயாரிப்பு புகைப்படங்கள் பகிரப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. திரையில் கதாநாயகனாக வலம் வரும் அஜித், டிராக்கிலும் தனது திறமையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். அவரது அணியின் எதிர்கால சாதனைகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!