×
 

இன்று ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! அனிருத் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சமயத்தில் அனிருத் பேசிய வார்த்தைகள் வைரல்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தான் ‘கூலி’. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம், ஆரம்பத்திலிருந்தே பல்வேறு காரணங்களுக்காக கவனம் பெற்றது. மிகுந்த நட்சத்திர பட்டாளம், வித்தியாசமான கதைக்களம், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை என, இது வரையிலான ரஜினியின் படங்களில் மாறுபட்ட ஒரு முயற்சி என கருதப்படுகிறது. இந்த ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

இசை வெளியீட்டோடு சேர்த்து, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிய ட்ரெய்லரும் இன்று வெளியாக உள்ளது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இந்த படத்தில், பல மாஸ் மற்றும் மெலோடியான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இது அனிருத்தின் ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணியில் மூன்றாவது படம். இந்த திரைப்படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் மூலம், படம் பன்மொழி கலாசார பிம்பத்தை முன்வைக்கிறது. இதுபோன்ற பான்-இந்தியா நட்சத்திர கூட்டணி, தமிழ்ப் படங்களில் தற்போது ஒரு புதிய உயர்நிலையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ‘கூலி’ படத்திற்கு இந்திய திரைப்பட தணிக்கை வாரியத்திலிருந்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது, படத்தில் இடம் பெற்றுள்ள அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் தீவிரமான திரைக்காட்சிகள் காரணமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இது குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக இல்லாமல், தீவிரமான திகில் மற்றும் ஆக்ஷன் அனுபவமாக அமைந்திருக்கலாம் எனத் திரையுலக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இப்படி இருக்க இசையமைப்பாளர் அனிருத், சமீபத்திய பேட்டியில் ‘கூலி’ படத்தை பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் பேசுகையில், "இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் நிச்சயமாக இருக்கிறார். அவர் எழுதும் கதையில் ரஜினி மாதிரியான ஒரு நடிகர் நடிக்கிறாரென்றால் அது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்பதை ‘கூலி’ காட்டுகிறது. இது ஒரு புத்திசாலித்தனமான படம். மிகவும் அழகான திரைக்கதையுடன் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருக்கிறார்கள். இப்படி ஒரு கூட்டணியை வேறு எந்தவொரு படத்திலும் காண முடியாது" என்று அனிருத் வெளிப்படையாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஜன நாயகன்" படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நரேன்..! ஹைப்பை தூண்டும் அதிரடி அப்டேட்..!

அனிருத் இசையமைக்கிறார் என்பது மட்டுமல்ல, அவர் திரைக்கதை மீதும் இப்படத்தின் உணர்வுப்பூர்வமான அடையாளத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ள ‘கூலி’ திரைப்படம், 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது. சுதந்திர தின விடுமுறை நாளை முன்னிட்டு படம் வெளியாவதால், வார இறுதி மற்றும் பண்டிகை காலம் சேரும் வகையில் மிகப்பெரிய ஓப்பனிங்க் வசூலை எதிர்நோக்கி உள்ளது. இப்படியாக ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்களில் சமூக அரசியல் மற்றும் ஆக்ஷன் கதையமைப்பை வலுவாக எடுத்துரைத்த லோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் இணைந்து இப்படம் மூலம் புதிய பயணத்தை தொடங்க இருக்கிறார். இது லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் இனைக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை என்றாலும், பலர் இந்த படம் அதன் தொடர்ச்சி என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

எனவே ‘கூலி’ படம் ஒரு சாதாரண ரஜினி படம் அல்ல, ஒரு புது பரிமாணத்தை தேடும் முயற்சி என அனிருத் கூறுவது போல, படக்குழுவின் அணுகுமுறையிலிருந்தே படம் பெரியதாக உருவாகி இருப்பதை உணர முடிகிறது. அனிருத் இசையும், ட்ரெய்லரும், இன்று வெளியாவதால், படம் முழுவதும் கொண்டுள்ள ‘மாஸ்’ மற்றும் ஆக்ஷன் கூட்டணியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: நடிகை ஊர்வசி ரவுதேலாவின் ரூ.70 லட்சம் நகை அபேஸ்..! விமான நிலையத்தில் திருடுபோன சூட்கேஸால் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share