திருட்டுத்தனமா படத்த பாக்குறீங்களே வெட்கமா இல்ல.. please திருந்துங்க..! ஜனநாயகன் லீக்.. ஆதரவுக்குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்..!
ஜனநாயகன் படம் லீக் ஆனதை அடுத்து சிவகார்த்திகேயன் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள படம் ஜன நாயகன் தற்போது வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடித்துள்ள இந்தப் படம், அரசியல் மற்றும் சமூகப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, தணிக்கை சான்றிதழுக்காக சென்சார் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரிய குழுவினர் படத்தை பார்த்தபோது, அதில் இடம்பெற்றிருந்த சில மதம் மற்றும் பாதுகாப்புப் படை தொடர்பான காட்சிகள் குறித்து கேள்விகள் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அந்த காட்சிகள் குறித்து மேலும் ஆய்வு செய்ய மறுஆய்வு குழுவிற்கு படம் பரிந்துரை செய்யப்பட்டது. இதனால், ஜன நாயகன் படத்திற்கு தற்காலிக தடை நிலை உருவானது. நீண்ட சட்டப்போராட்டங்களுக்கும், விளக்கங்களுக்கும் பின்னர், படக்குழு மீண்டும் திருத்தப்பட்ட வடிவத்தில் படத்தை சென்சார் குழுவிடம் சமர்ப்பித்தது. விரைவில் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியீட்டு திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதையும் படிங்க: ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக்..! படக்குழுவினர் பேரதிர்ச்சி..!!
முதலில் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வெளியீடு தாமதமானது. பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு மே மாத இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், எதிர்பாராத வகையில் நேற்று மாலை சமூக வலைதளங்களில் சில நிமிட காட்சிகள் மட்டும் ஜன நாயகன் படத்திலிருந்து கசிந்ததாக தகவல் வெளியானது. முதலில் இது தவறுதலாக வெளியான சிறு பகுதி என கருதப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் மூன்று மணி நேரம் கொண்ட முழு திரைப்படமே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினரை மட்டுமல்லாமல், விஜய் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல வருட உழைப்பில் உருவான ஒரு பெரிய படைப்பு, அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே இவ்வாறு கசிந்திருப்பது திரையுலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா வட்டாரங்களில் இது “பைரசி” (piracy) பிரச்சினையின் மிகக் கடுமையான வடிவமாக பார்க்கப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் இவ்வாறு இணையத்தில் வெளியாவதால், தயாரிப்பாளர்களுக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பால் உருவாகிறது என்றும், அதை திருட்டுத்தனமாக பார்ப்பது தவறானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயன், இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். திரையரங்கில் வெளியான பிறகே படங்களை பார்க்க வேண்டும் என ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம். இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது; தயவுசெய்து திருட்டுத்தனத்தை தவிருங்கள். திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கே சென்று பாருங்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையாளர்களை மதியுங்கள்... கடின உழைப்பை மதியுங்கள்... சினிமா துறையை மதியுங்கள்..." என்று தெர்வித்துள்ளார்.
இதற்கிடையில், தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் படம் வெளியான மூலத்தை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், ஜன நாயகன் இணையத்தில் கசிந்த சம்பவம் தமிழ் திரையுலகில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் ஏற்பட்ட இந்த நிகழ்வு, எதிர்காலத்தில் பைரசி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையான விதிமுறைகள் தேவைப்படுவதாகவும் திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் நடித்துள்ள இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் குறையாத நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீடு எப்போது என்பது குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: Election முடிந்தால் ஜனநாயகனுக்கு வழி பிறக்கும்..! விஜய் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்..!