நீதிமன்றத்திற்கு போனாலும் விட மாட்டோம்... கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை!!
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காமல் படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. பல்வேறு மொழிகளில் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கர்நாடகாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்ததாக கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த கன்னட மொழி ஆர்வலர்கள், தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காமல் தக் லைப் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது என்றும் போர்க்கொடி உயர்த்தினார்கள். இந்நிலையில் 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகத்தில் எந்த திரையரங்கிலும் திரையிடப்படாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து 'தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகாவில் சுமூகமாக வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'தக் லைஃப்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் சார்பில், பாதுகாப்பு கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கன்னட மொழிக்கு எதிரானவரா கமல்..? அவதூறு பரப்புவதா.? தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்!!
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதுக்குறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எம். நரசிம்மலு பேசுகையில், ஊடகங்களில் செய்தி வெளியான பிறகுதான் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுவது குறித்து தங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் சட்டக் குழுவுடனும் பேசவிருக்கிறோம். இது வெறும் திரைப்படத் துறை பிரச்சினை அல்ல; இது ஒரு மாநில மற்றும் மொழிப் பிரச்சினையாக மாறி இருக்கிறது. இது தொடர்பாக அரசிடம் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. எனவே கன்னட ஆதரவு அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் மாநில மக்கள் உட்பட அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.
அவர்கள் கர்நாடாவின் உயர்நீதிமன்றத்திற்கு செல்லட்டும். நாங்கள் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. இங்கே, எங்கள் திரையரங்குகள் எதுவும் 'தக் லைஃப்' படத்தை திரையிடாது. துபாயில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசனிடம் பேசிய பிறகு செவ்வாய்க்கிழமை ஒரு முடிவுக்கு வருவோம் என்று கர்நாடகாவில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எனக்கு தெரிவித்தனர். எனவே, கமலுடன் பேசிய பிறகு, அவர்கள் தங்கள் முடிவை எங்களிடம் தெரிவிப்பார்கள். நீதிமன்ற பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் நாங்கள் விவாதித்து ஒரு முடிவை எடுப்போம். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கூட கமல் ஹாசனை இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பு கொள்ள முயற்சித்தது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தக் லைஃப் ஜிங்குச்சான் பாடல் சானியாவா இது? கிக் ஏற்றும் ரீசென்ட் போட்டோஸ்!