×
 

அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவால் இன்று சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்துள்ளது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் பங்கு வர்த்தகத்திற்கான முதலீட்டு வரி (STT) சற்று உயர்த்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. அதன் விளைவாக, பங்குச் சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டது. 

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,500-க்கும் மேற்பட்ட புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது. இது சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேற்று (பிப்ரவரி 2) தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடினர். இந்த உரையாடலுக்குப் பிறகு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு டபுள் ஷாக்..!! 2வது முறையாக அதிகரித்த தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..!!

அதில், "பிரதமர் மோடியுடனான நட்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில், அவரது வேண்டுகோளின்படி, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டோம். இதன்படி, அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி விகிதம் 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி, அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்தும், சாத்தியமானால் வெனிசுலாவிலிருந்தும் அதிக அளவில் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார். இது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் அவர் கூறினார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு இந்திய சந்தையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால், இன்று (பிப்ரவரி 3) பங்குச் சந்தை வலுவான உயர்வுடன் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 3,657 புள்ளிகள் வரை உயர்ந்தது. நிஃப்டி 1,220 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இந்த உயர்வு முழு வர்த்தக நேரத்திலும் தொடர்ந்தது.

இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 2,072 புள்ளிகள் (சுமார் 2.54 சதவீதம்) உயர்ந்து 83,739 புள்ளிகளிலும், நிஃப்டி 639 புள்ளிகள் (சுமார் 2.55 சதவீதம்) உயர்ந்து 25,727 புள்ளிகளிலும் நிலைத்தது. இது சமீப காலங்களில் பதிவான மிகப்பெரிய ஒரு நாள் ஏற்றங்களில் ஒன்றாகும். அமெரிக்கா-இந்திய வர்த்தக ஒப்பந்தம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.

பல துறைகளில் பங்குகள் கணிசமான லாபத்தைப் பதிவு செய்தன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகத் தடைகள் குறைவதால் ஏற்றுமதி-இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சந்தை நிபுணர்கள் இந்த நேர்மறையான வளர்ச்சி தொடரும் எனக் கருதுகின்றனர்.
 

இதையும் படிங்க: அமெரிக்கா வரி குறைப்பு எதிரொலி!! வேகம் காட்டும் பங்குசந்தை!! சென்செக்ஸ் அதிரடி உயர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share