தலைக்கேறிய கஞ்சா போதை.. மூதாட்டியை தரதரவென இழுத்து சென்ற பகீர் காட்சி.. கம்பி எண்ணும் இளைஞர்..!
ஆற்காடு அருகே கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் 80 வயது மூதாட்டியிடம் அத்துமீறி அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கஞ்சா பயிறிடுவதை தடுக்கவும் போலீசார் அதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கஞ்சா ஆப்ரேஷன் 1.0 வில் ஆரம்பித்து கஞ்சா ஆப்ரேஷன் 2.0, கஞ்சா ஆப்ரேஷன் 3.0, கஞ்சா ஆப்ரேஷன் 4.0 என அது நீண்டது. இதில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலும் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டது. ஆனாலும் கஞ்சாவால் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இந்தியாவின் எதிர்காலம் என போற்றப்படும் இளைஞர் சமுதாயம், போதையால் பாதை மாறி செல்வது தொடர்கதை ஆகி வருகிறது. மதுவுக்கும் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளுக்கும் அடிமையாகும் இளைஞர்கள் சிலர், தான் என்ன செய்கிறோன் என்ற உணர்வே இல்லாமல் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகவும் இந்த போதைபொருள் புழக்கம் மற்றும் போதைப்பொருள் நுகர்வு கலாச்சாரமே முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. அடர்ந்த காட்டில் இளைய மகள்.. வயநாட்டில் நடந்தது என்ன..?
அதேபோல, கஞ்சா போதை தலைக்கேறியதும் இளைஞர்கள் சிலர், அடிதடி, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. போலீஸ், நீதிமன்றம் போன்றவை குறித்த அச்சமோ, கவலையோ இல்லாமல் அவர்கள் குற்றங்களில் ஈடுபட போதைப்பொருள்கள் அவர்களை தூண்டி விடுகின்றன. இந்நிலையில் ஆற்காடு அருகே கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் 80 வயது மூதாட்டியிடம் அத்துமீறி அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரி பின்புறமாக தாண்டவராயன் என்பவரின் மனைவி சுசிலா (80) வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான மாங்காய் தோப்பில் நேற்று மாலை 5 மணி அளவில் கத்தியவாடி பகுதியை சேர்ந்த பத்மநாபனின் மகன் நந்தகுமார் (19) கஞ்சா போதையில் வந்து மூதாட்டியிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அவர் கத்தி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மூதாட்டியை கீழே தள்ளி தரதரவென இழுத்துச் சென்றார். இதனால் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியிடம் தனது காட்டுமிராண்டித்தனத்தை காட்டியது மட்டுமில்லாமல், வாயில்லா ஜீவனையும் எட்டி உதைத்து சென்றுள்ளார் அந்த போதை இளைஞர். இதனையடுத்து கொலை சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, இளைஞர் நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரச்சனையை தீர்த்து வைக்க சென்ற நபர் சரமாரியாக வெட்டிக்கொலை.. திருத்தணியில் பயங்கரம்..!