பிரச்சனையை தீர்த்து வைக்க சென்ற நபர் சரமாரியாக வெட்டிக்கொலை.. திருத்தணியில் பயங்கரம்..!
திருத்தணி அருகே மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் பிரச்சனையை தீர்த்து வைக்க சென்ற நபரை அவரின் மனைவி கண் முன்னே வெட்டி தீர்த்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் தனக்கு சொந்தமான இடத்தை சொக்கனூர் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு கொடுத்துள்ளார். அந்த இடத்திற்கு அருண் மாதம் மாதம் 1000 ரூபாயும் மற்றும் ஊர் பஞ்சாயத்திற்கு ரூபாய் 1000 வழங்கி வந்துள்ளார்.
அதேபோல் அகூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யாவின் தந்தை ஆறுமுகம் மாட்டு இறைச்சி விற்பனை செய்து வருகிறார். ஆனால் சூர்யா மாட்டிறைச்சி கடையை விட அருண் மாட்டு இறைச்சி விற்பனை ஜோராக நடந்து வந்துள்ளது. சூர்யாவின் தந்தை போட்டுள்ள மாட்டிறைச்சி விற்பனை மந்தமாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா, அருணிடம் நீ மாட்டிறைச்சி விற்பனை செய்வதால் தன்னுடைய மாட்டிறைச்சி விற்பனை ஆகாமல் தொழில் பாதிப்பு அடைவதாகவும் தனக்கு வாடிக்கையாளர்கள் வருவதில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எங்க ஊர் பகுதியில் நீ மாட்டு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என கேட்டு சூர்யா அருணுடன் தகராறு செய்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக கவுன்சிலருக்கு திமுக பெண் கவுன்சிலர் ‘பளார்’ விட்ட சம்பவம்.. 13 பேர் மீது வழக்குப்பதிவு..!
இதனைத் தொடர்ந்து வெளியூர் பகுதியைச் சேர்ந்த நபரான அருணுக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்ய இடம் கொடுத்த வேலாயுதத்தை தேடி, சூர்யா அவனுடைய நண்பர்கள் விக்கி, முன்னா, தினேஷ், சூர்யா ஆகியோர் மது போதையில் கையில் கத்தியுடன் வேலாயுதம் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
அப்போது வேலாயுதத்தின் தாய் மாமன் ரவி என்பவர் வேலாயுதம் வீட்டிற்கு வந்து இருவரிடமும் சமாதானம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா தனது நண்பர்களுடன் இணைந்து பிரச்சனையை தீர்த்து வைக்க வந்த ரவியை வேலாயுதம் வீட்டிலேயே வைத்து அவரின் மனைவி கண் முன்னே சரமாரியாக தலையிலும் இடது பக்கத்திலும் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவி, துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் ரவியின் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பிய ஐந்து இளைஞர்களையும் திருத்தணி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் விசாரணை மேற்கொண்டார். மாட்டிறைச்சி விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைக்க சென்ற நபரை வீட்டில் வைத்து அவர் மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. அடர்ந்த காட்டில் இளைய மகள்.. வயநாட்டில் நடந்தது என்ன..?