திருமணம் செய்து வைக்க கோரி தகராறு செய்த மகன் கொலை?! தாய், பாட்டி கைது! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!
விசாரணையின்போது இருவரும் முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகவும், பின்னர் அருண்குமாரின் மரணம் தொடர்பாக தங்களது பங்கு குறித்து ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி: கல்லாவி அருகே 32 வயது இளைஞர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உட்கோட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 32. மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படும் இவர், தனது தாய் கிருஷ்ணவேணியுடன் வசித்து வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணவேணி கடந்த சுமார் 20 ஆண்டுகளாக தஞ்சாவூரில் பானி பூரி கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்த அவர், கடந்த ஆண்டு திருச்செங்கோட்டுக்கு சென்று அங்கும் பானி பூரி கடை நடத்தி வந்ததாக தெரிகிறது. அங்கு தாய், மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் இருவரையும் வெளியேற்றியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கருவில் இருப்பது ஆணா, பெண்ணா?? பாலினத்தை கண்டறிய ரூ.10 ஆயிரம்? கையும் களவுமாக சிக்கிய 2 பேர்!
இதையடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி தாதுநாயக்கன்பட்டிக்கு திரும்பிய இருவரும், அருண்குமாரின் பெரியப்பா கோவிந்தன் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அருண்குமார் தனது தாயிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அதிகாலை அருண்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார். இதையடுத்து கல்லாவி போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
கடந்த 13-ம் தேதி கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அருண்குமார் உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது தாய் கிருஷ்ணவேணி மற்றும் பாட்டி ராணியம்மாளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது இருவரும் முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகவும், பின்னர் அருண்குமாரின் மரணம் தொடர்பாக தங்களது பங்கு குறித்து ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கல்லாவி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த சந்தேக மரண வழக்கு, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103(1) பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணவேணி மற்றும் ராணியம்மாளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சந்தேக மரணமாக தொடங்கிய வழக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தொடர்ந்து கொலை வழக்காக மாறிய சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இனி ஸ்கூலுக்கே போக மாட்டேன்… அழுதபடி வந்த 10 ஆம் வகுப்பு மாணவி; சில்மிஷ ஆசிரியர் மீது போக்சோ வழக்கு!