மேலூரில் அதிகாலையில் பயங்கரம்.. பள்ளி பின்புறம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!
சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அதிகாலையில் இளைஞர் ஒருவர் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து மேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மேலப்பூவந்தி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி–அழகுபிள்ளை தம்பதியின் மகன் செல்லத்துரை. இவரது குடும்பத்தினர் கடந்த 7 ஆண்டுகளாக மேலூர் அருகே உள்ள வெள்ளநாதன்பட்டி பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
செல்லத்துரை ஐடிஐ படிப்பை முடித்த பின்னர், வெள்ளநாதன்பட்டி பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை ஒன்றில் சில மாதங்கள் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. பின்னர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வேலை இல்லாததால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மேலூர் பகுதிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!
இந்த நிலையில், இன்று அதிகாலை மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் செல்லத்துரை பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலூர் காவல்துறையினர், உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூறாய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன, அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. செல்லத்துரைக்கு முன்விரோதம் இருந்ததா, வேறு ஏதேனும் காரணத்தால் இந்த கொலை நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிகாலை நேரத்தில் பள்ளி அருகே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கரம்.. பட்டா கத்தியுடன் இளைஞர்களை விரட்டி வெட்டிய திமுக கவுன்சிலர் கணவர்!