திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு..!! லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதியை தட்டித்தூக்கிய டெல்லி போலீஸ்..!!
திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு வைத்திருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியும், நாடு முழுவதும் இந்து கோவில்களை குறிவைத்து பெரிய அளவிலான நாசவேலை திட்டம் தீட்டி வந்தவருமான ஷபீர் அகமது லோன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் நேற்று மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்னணியில் இருந்து இவர் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, தலைநகரில் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்க டெல்லி போலீசார் சிறப்பு பிரிவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையப் பகுதிகளில் தேச விரோத வாசகங்களுடன் (காஷ்மீர் தொடர்பானவை) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், கொல்கத்தாவைச் சேர்ந்த உமர் பாரூக் மற்றும் ரோபில் உல் இஸ்லாம் ஆகிய இருவருக்கு இந்த சுவரொட்டி விவகாரத்தில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: CM வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை... தீவிர சோதனை..!! பரபரப்பு..!!
டெல்லி போலீசார் உடனடியாக கொல்கத்தா சென்று அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகேயுள்ள ஒரு இந்து கோவில் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் பெரிய திட்டம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது.
இந்த நாசவேலைக்கு ஆட்களை தயார் செய்து அனுப்பிய முக்கிய நபர் யார் என விசாரித்தபோது, ஷபீர் அகமது லோன் என்ற பெயர் வெளியானது. வங்காளதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2007-ம் ஆண்டு ஒரு அரசியல் தலைவரை கொலை செய்ய சதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 2019-ல் சிறையிலிருந்து வெளியே வந்த அவர், வங்காளதேசத்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, இந்து கோவில்களுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
ஷபீர் அகமது லோன், டெல்லியில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு ஆட்களை அனுப்பியதோடு, திருப்பூருக்கும் ஒரு கும்பலை அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கும்பலில் இருந்த 6 பேர், பிப்ரவரி 21-ம் தேதி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சமூக வலைதளங்களில் தேச விரோதப் பதிவுகளை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த 40 நாட்களாக ஷபீர் அகமது லோனை டெல்லி போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
வங்காளதேச எல்லைப் பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இறுதியில் உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூரில் மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் போலீசாரின் தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவின் "A TEAM" தான் திமுக... கல்விக்கடன் கொடுக்க வட்டிக்கடையா நடத்துறீங்க? சீமான் சரமாரி கேள்வி..!!